Sunday, 27 October 2013

டெல்லி அனுபவம் -1

நான் என் பணி நிமித்தமாக டெல்லி சென்றபோது என்னை அழைத்துச் சென்று வழிகாட்ட மற்றும் வீடு பிடிக்க என பல விதத்திலும் எனக்கு உதவியது  எங்களது குடும்ப நண்பரின் மகன் . கூட அவரின் நண்பன் ஒரு தமிழ் பேசும் இளைஞன் வந்திருந்தான்.
இருவரும்  ஏதோ  டிஃ பென்சு அலுவலகத்தில் வேலை
செய்துகொண்டிருந்தார்கள் .
அவர்கள்  இருவரும் ஒரு தென்னிந்திய மாமி ஒருவரின் வீட்டில் பேயிங்  கெஸ்டு  போல தங்கி இருந்தார்கள்.
அந்த மாமி எங்களை அவசியம் தன் வீட்டிற்குக்  கூட்டி வருமாறும் தான் எல்லா உதவியும் செய்வதாகவும் சொன்னதால்  என்னையும் என் அம்மாவையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்கள் .
எங்க அம்மாவுக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியுமாதலால் முன் கூட்டியே என்னிடம்  நமக்கு காரியம் ஆகணும் எனவே காமெடி எதுவும்  பண்ணாதே என்று எச்சரித்து இருந்தார்கள்
அந்த மாமி மிகவும் நல்ல மாதிரி ,
பிறருக்கு உதவும் பரோபகார எண்ணம் ரொம்பவே உண்டு .
ஆனால் என்ன தில்லியே  தன் கையில்தான் என்பது போல பேசினார்கள்.

அப்போது பிரதம மந்திரியாக இருந்த திருமதி இந்திரா காந்திக்கு கூட தான் தான் நல்ல நாள் பார்த்து  வேறு ஒருவர் மூலம் சொன்னேன் என்று எல்லாம் சொன்னார்கள்
டெல்லியின் சரித்திர ,பூகோள ,அரசியல் ,உணவு ,பால்  கோதுமை மற்றும் உடை  .இவற்றைப் பற்றியெல்லாம்  ஒரு மணி நேரம் விலாவாரியாக எங்களுக்கு ஒன்றுமே தெரியாது  என்று நினைத்துக்கொண்டு   அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள் .
மாமி அப்பப்போ நடுவிலே வரும் டி .வி. விளம்பரம் மாதிரி
 புரியுதா புரியலேன்னாக்க  தாராளமா கேள்வி கேளுங்க என்று எங்களை
உசுப்பி  விட்டுக்கொண்டிருந்தார்கள்
என்னடா இது மாமியே  பேசிக்கொண்டிருக்கிறார்களே  நாமும்  ஏதாவது பேசுவோம் இல்லாங்காட்டி மாமி பேச்சு டீச்சர் கிளாஸ் எடுக்கிற மாதிரி இருக்குதே என்று ஏதாவது கேள்வி கேட்க சான்ஸ் வராதான்னு காத்திருந்தேன்.
என் அம்மாவோ அல்லது அந்த பையன்களோ கேள்வி எந்த நிலையிலும் கேட்கத் தயாரில்லை என்று தீர்மானித்த முக பாவனையுடன் இருந்தனர்.
அந்த சமயம் பாத்து மாமியும்
நாங்களெல்லாம் மெட்ராசை விட்டு தள்ளி இருந்தாலும் எது செய்யறதா இருந்தாலும் நல்ல நாள் முகூர்த்த நாள் பாத்து தான் செய்வோம் .
 உதாரணத்துக்கு  இப்போ பாருங்க ,கோடைக் காலத்திலே நாங்க  எல்லாரும் மொட்டை மாடியிலே போய்த்தான் படுப்போம்.
அது கூட "சும்மா ஏதோ ஒரு நாள்" ன்னு  இல்லாம   அஷ்டமி  நவமி ,பரணி கார்த்திகை எல்லாம் பாத்துதான் போவோம்  “ன்னாக்க பாத்துக்குங்களேன் .என்றார்.
அவரின் கெட்ட காலமோ அல்லது என் நுனிப்புல் ஞானமோ என் நாக்கில் சனி  பூந்து  சமயம் பாத்து சூப்பர் ஸ்பீடில் போய்க் கொண்டிருந்த மாமியின் பேச்சில் ஒரு  ஸ்பீடு பிரேக்கர்  மாதிரி  என்னை ஒரு இடக்கு மடக்கான கேள்விகேட்க வைத்தது .
 " அதுமாதிரி கோடை முடிந்து மறுபடியும் வீட்டுக்குள்ளே வந்து படுக்கவும் நல்ல நாள் பாப்பிங்களா?" என்று அப்பாவித்தனமாக கேட்க மாமியால் என் போட்டுத்தாக்கு டைப் கேள்வியை எதிர் கொள்ளமுடியாமல் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டார்கள் .
எங்க அம்மா தேவை இல்லாத வெட்டிக்கேள்வி ஏன் என்று கண்ணால் என்னை ஒரு முறை முறைத்தார்கள் .
 அந்த மாமி சொன்ன பதில் என்ன தெரியுமோ?
 அதுக்கு நாளெல்லாம் பாக்க முடியாது .
மழை வந்தால் பாயைச்  சுருட்டிக்கொண்டு உள்ளே வந்துடணும்.

என் குடும்ப நண்பரின் மகனும் அவன் நண்பனும் சிரிப்பை அடக்கமுயன்று விட்டதைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர் .

Friday, 25 October 2013

வாகனங்களும் ஒரு வளர்ந்த பயிரே

 "இன்றைக்கு .........ஊரில் நாலு பஸ்ஸைக்  கொளுத்திட்டாங்களாம்.
மூணு பஸ்ஸை  அடிச்சு நொறுக்கிட்டங்களாம் .
ஒரு ரெண்டு  பஸ்ஸை  மிக்சர் மாதிரி தூள் பண்ணிட்டாங்களாமே   "  


ஒரு பத்து வருடம் முன்பு இது போன்ற வாய் வழிச் செய்திகள் , தொலைக்காட்சியின் காணொளிச்செய்திகள்    மற்றும் செய்தித்தாள் செய்திகள் என்னை சுத்தமாக சொல்லப்போனால்  ஒரு கடுகளவு கூட பாதித்ததில்லை .

ஒரு வேளை நான் சொந்தமாக பஸ்ஸூ எதுவும் வைத்திருக்காத காரணமா  என்னவோ  தெரியவில்லை .
 நான் முதன் முதலில் இது போன்ற வாகனங்களைக் கொளுத்தும்
நிகழ்வுகளைப் படிக்க நேரிட்டது 1960 களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்   போதுதான் .
அப்போது நான் ஏழு அல்லது எட்டு வயதுச்சிறுமி யாக இருந்த காலம் .அப்போதுதான்
" அட !கோபம் வந்தால் பஸ்ஸை நொறுக்கலாம் போலே "
என்ற   உலக மகா உண்மையை உணர்ந்து கொண்டேன்

ஆனாலும் இது வரை எந்த பஸ் மீதும் கல்லை விட்டு எறிந்ததில்லை
.பயமா அல்லது .பஸ்ஸின்  அருகே கல் எதுவும் என் கண்ணுக்கு அகப்படாததும் ஒரு காரணமா  என்றும் தெரியவில்லை .
வாழ்நாளில்  அப்படி ஒரு வீர சாகசம் பண்ணவில்லை என்பது நிஜம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பின் பல முறை பல பஸ் எரிக்கும் நிகழ்வுகளைப்  படித்த போதும் கூட
 "இது என்ன புதுசா  ? நார்மலாக நடக்கும் ஒரு நிகழ்வுதானே"  என்று
அந்த செய்தியின் முழு விவரமும் படிக்காமலே அடுத்த பத்திக்கு கண்  ஒரு  லாங் ஜம்ப் செய்துவிடும்.
 அந்த பஸ் எரிப்புகள் பற்றி கவலைப் பட்டதும்  கிடையாது ..

.மேலும்  பலரால்  இது  சமூக அவலங்கள்  மற்றும் சமூக அநீதியைத்  தட்டி கேட்கும் ஒரு ஜனநாயக முறை என்பது போன்ற எண்ணம் எழுத்துவடிவில் சொல்லப் படாவிட்டாலும் மனதளவில் நினைக்கப் படுவது மறுக்கப் படமுடியாத உண்மை .

ஒரு பத்து வருடம் முன்பு கார் பஸ் போன்ற வாகனங்கள் நம்மை வேண்டும் இடத்திற்கு ஏற்றிச் செல்லும்  நாலு சக்கரம் கொண்ட ஒரு தகரக் கூடு என்ற அளவில் தான் ஆட்டோமொபைல் பற்றிய எனது அறிவு இருந்தது
.அது பற்றி தெரிந்துகொள்ள  ஆர்வம் இல்லாதது
எனது  தொழில் வங்கிப் பணி என்பதாலும்
வாகனங்கள் எதுவுமே ஓட்டத்தெரியாத காரணத்தாலும்
என்று கூடச்  சொல்லலாம் .

ஆனால் நான் ஒரு கார் உற்பத்தி பண்ணும் தொழிற்சாலையில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்த போதுதான்  நான்  இதுவரை வாகனங்களின் மீது கொண்ட எண்ணத்தைத்   தலை கீழாய்ப்  புரட்டிப் போட்டு விட்டது .
வாகனங்களின் ஒரு ஒரு சிறிய பாகங்களுக்குக் கூட பல முறை "டிரையல் ரன் கள் " செய்யப்படுகின்றன .
அந்த சரியான சைஸு செய்வதற்குள் எத்தனையோ பேர்  எவ்வளவு பாடு பாடுபடுகின்றனர் .
அதுவும்  பாகங்கள் உற்பத்தி பண்ணும் இடம் என்பது  சுகமான குளிர்சாதனம் உள்ள இடம் கிடையாது.
 ஏப்ரல் ,மே மாதங்களில் ஆஸ்பெஸ்டாஸ்  கூரையின் கீழ் வேலை செய்யும் கடுமை அதுவும் ஆசுவாசமாக உட்கார்ந்து அல்ல நின்று கொண்டே ! வார்த்தைகளில்  விவரிக்க இயலாது.
சுற்றிவர மிஷின்களும் அதன் சத்தமும் சில சமயங்களில் நெருப்பு
உபயோகிக்கும்  பர்னர்களும், எண்ணெய் கசியும் மெஷின்களும் .பெட்ரோல் வாசம் மற்றும் பெயிண்ட் வாசம் இவைகளுக்கிடையில் தான் ஒவ்வொரு  வாகனமும்  தயாரிக்கப் படுகின்றன.
 அதுவும்  வாகனத்தின் கீழ்ப்   பகுதியை  மேல் பகுதியுடன் பொருத்தும் தொழிலாளி கழுத்தை மேலே நோக்கி  வைத்துக்கொண்டு தான் வேலை செய்யவேண்டும் .
அப்பப்பா!
நடுவே ஏதாவது  மனிதத் தவறால் சரியாகப் பொருந்தவில்லை என்றால்  வீண்  என்று மறுக்கப் பட்டுவிடும்.
தொழிற்சாலையில் உள்ள கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை வெகு கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை .

விவசாயத்தில் எப்படி நடந்துகொண்டே உழவேண்டும் , குனிந்துகொண்டே நாற்று நடவேண்டும் ,களை எடுக்கவேண்டும்
அதுபோல வாகனத் தயாரிப்பிலும்  பல விதமான உடல் உழைப்பும் ,பலரின் உழைப்பும் ,மூளையும்   அடங்கி உள்ளது.
இதைப் பார்த்தபின் ,அதுவும்  நேரிடையாக நானும் இதில் ஒரு பங்களித்தபின் 'எங்கேயாவது
"பஸ்ஸை  அடிச்சு நொறுக்கிட்டங்களாம் .
 மிக்சர் மாதிரி தூள் பண்ணிட்டாங்களாமே "
என்று படித்தால்  நான் சொந்தமாக பஸ் வைத்திருக்கா விட்டாலும் சத்தியமாக மனது வலிக்கிறது.
என் தனி ஒரு மனுஷியால்  முடிந்தது  பலரின் கவனத்தை ஈர்க்கும்  வகையாக ஒரு பதிவு மட்டுமே எழுத முடியும் .
இந்த பதிவால் ஒரு பஸ் மட்டுமாவது சேதம் ஆவதிலிருந்து காக்கப் பட்டால்
இந்த பதிவிற்குப் பெருமை என்பதை விட அந்த பஸ்சிற்கு நன்மை என்பதே நிஜம் .


 இந்த பிரச்னையை  உளவியலாக நோக்கினால்  பொருட்களைப்பற்றிய நமது கற்பித்தலே   என்று நான் நினைக்கிறேன்.
நமது சமூகத்தில் பொதுவாக ஒரு உணவு தானியத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு ஸ்குரூ விற்கோ அல்லது ஆணிக்கோ கொடுப்பதில்லை .நாம் குழந்தையாக இருக்கும்போது நமது வீட்டுப் பெரியவர்களால் அரிசி மணிகள் வீணாக்கக்கூடாது என்று கற்பிக்கப் பட்டோமே தவிர ஒரு குண்டூசி ஆணி இவைகளும் அரிசி மணி போல கருதப்படவேண்டியவை என்று போதிக்கப் படாத காரணமும் அடங்கும்  என்றே நான் நினைக்கிறேன்.
எனவே இனிவரும் தலைமுறைக்காவது இதைப்  பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவோம்

தவிர அரசாங்கமும் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு  அறுபது எழுபதுகளில் விளம்பரம் கொடுத்தது போல வாகன உற்பத்தியில் உள்ள பல விதமான கஷ்டங்களையும் சுருக்கமாக விளக்கி வாகனங்களை சேதப்படுத்துவது தவறு .நிச்சயமாக வீர தீர சாகசச் செயல் அல்ல என்பதை விளம்பரம் மூலம்  புரிய வைக்கலாமே !



Thursday, 24 October 2013

நெட் பாஸ்டிங் .

ஒரு துக்க நிகழ்ச்சிக்காக திருச்சி சென்றதால் பதிவுகள் ஏதும் எழுத முடியவில்லை .
மிக மிக வருத்தம் தரக்கூடிய துக்க நிகழ்வு . ஒரு சாலை விபத்தில் ஒரு உறவினர்  இறந்துவிட்டார்.பாசமிக்க  பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கொண்ட குடும்பம் .மனதை மிகவும் உலுக்கிய சம்பவம் .

சுமார் 4 வருடங்கள் கழித்து நான் அங்கு செல்வதாலும்  மற்றும் சில  உறவினர்கள்  இல்லங்களுக்கும் சென்றதாலும்  ஐந்து நாட்களுக்கு நெட் பாஸ்டிங் .ஏனென்றால் நான் தங்கிய உறவினர் இல்லத்தில் இன்டர் நெட் வசதி கிடையாது.மேலும் எனக்கும் நெட் செண்டர் சென்று பார்க்கவும் இஷ்டமில்லை .

அதனால்தான்  யாருடைய பதிவிற்கும்  பின்னுட்டங்கள் இடவில்லை.

எனது வழக்கமான வேலைகளிலிருந்து ஒரு மாற்றம் .
கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உறவினர் வீட்டுக் குழந்தைகள் பள்ளி செல்ல படுத்தும் பாட்டைப் பார்த்ததும் என் குழந்தைகள் எல் கே ஜி யூ  கே ஜி செல்லும் போது செய்த  குறும்புகள்
நினைவுக்கு வந்தது.
இவற்றை எல்லாம் பற்றி விரிவான பதிவுகள்  விரைவில்.

Saturday, 19 October 2013

ஊரோடு ஒத்து வாழ்

நான் ஹைதராபாத்தில்  என் மகன் ஒரு நாலு மாதக் குழந்தையாக  இருந்தபோது அவனை  பக்கத்தில் இருந்த ஒரு மார்வாடிக்
 கடைக்குக் கூட்டிப் போவது வழக்கம்.
அது முழுக்க முழுக்க தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த பகுதி .
ஹிந்தி அவ்வளவாக யாரும் பேசுவதில்லை .
எனக்கும் தெலுங்கு பேச வராத காலம் அது.
அந்த மார்வாடிக் கடைக்காரருக்கும் தெலுங்கு பேச வராது.
எனவே நாங்கள் ஹிந்தியில் பேசிக்கொண்டிருப்பது அவருக்கும்  ,அவர் மனைவிக்கும் ஏன் எனக்குமே மன நிறைவைத் தந்தது.

என் மகனும் வெளியே கூட்டிச்சென்றால் அழ மாட்டான் .என்பதால் அடிக்கடி அந்தக் கடைக்குப் போய் பேசிக்கொண்டிருப்பேன்.

 வழக்கமாக மார்வாடிகள் வைத்திருக்கும் சாமி படங்கள் இல்லாமல் அவரின் கடையில் திருப்பதி வெங்கடாசலபதி   பத்மாவதி தாயாருடன் உள்ள படங்களும்,  மற்றும் அந்த மெயின்  படத்தைச் சுற்றி ஆந்திரர்கள் வழிபடும் சாமி படங்களும் சொல்லப்போனால் ஒரு   தனி தெலுங்கானா  ரேஞ்சுக்கான ஆந்திரா கடை மாதிரியே இருக்கும் .
நன்கு பழக ஆரம்பித்ததும் அவர்களிடம் நான்
 " நீங்களோ வட இந்தியர்கள் ,அது எப்படி  உங்கள் கடையில்  தென்னிந்தியர்கள் வழக்கமாக  வணங்கும் மாதிரியான
கடவுளர்  படங்கள் உள்ளனவே "
 என்று கேட்டேன்
இதே நாமாக இருந்தால்
" வடக்கும் தெற்கும் பெருமை , வேற்றுமை காண்பது மடமை "
என்றோ
அல்லது
"வட இந்தியாவும் தென் இந்தியாவும் ஒண்ணு, அதை அறியாதவன் வாயிலே மண்ணு " என்பது போன்ற சினிமாத்தனமான ,மொக்கை பதிலை சொல்லிவிட்டு   என்னவோ பெரிய பார் புகழும் பஞ்ச் டயலாக் அடித்த இமோஷனில்
" டப டப டப் டப் "  கைதட்டலுக்கு
வடைக்கு ஆசைப் பட்ட நரி கணக்கா காத்திருப்போம் .
ஆனால் அவர் சொன்ன பதில் என்ன தெரியுமோ?
சூப்பரோ சூப்பர்  பிராக்டிகலான  நெத்தியடி
பதில்.
"இந்த ஊர் கடையிலே இந்த ஊர் சாமிய வச்சதானே காசு கொடுக்கும்.
எங்க ஊர்  சாமியே வெச்சா இந்தூர் சாமி கோச்சுகிட்டு
காசு குடுக்கலேன்னாக்க.........?ஏதாச்சும் ஆச்சுன்னக்க எங்கூர் சாமியா அவ்வளவு தூரத்திலிருந்து ஒடியாரும் ஒதவிக்கு?


பொங்கி வந்த "குபுக்"கை கஷ்டப்பட்டுத்தான்  144 போட்டேன்

பச்சப் புள்ளதனமாவும் ,சாமிக்கே  பூகோள எல்லை வகுத்து பார்டர் போட்ட பதிலாக மேலோட்டமாகத் தெரிந்தாலும் ஒரு உண்மை மட்டும் தெரிந்தது. அதுதான் எந்த ஊரில் உள்ளோமோ அந்த ஊரின் பழக்க வழக்கப் படி நடப்பது.
அதனால்தான் மார்வாடிகளால் பிழைக்கமுடிகிறது.


 அதாவது    ஊரொடு ஒத்து வாழ் பாலிசி 

 இதை  நாமும்  மனப்பாடப் பகுதியாக சிறு வயதில் படித்தோம் .
சரியாக ஒப்புவிக்கவில்லையானால்
 நீயெல்லாம் "பன்னி மேய்க்கத்தான் லாயக்கு "
என்று பெற்றோர்கள் அவர்கள் மனப்பாடப்பகுதியை    குழந்தைகளிடம்
ஒப்புவிபதுதான் பொதுவான நடைமுறை வழக்கம்.
அதை குழந்தை சரியாக எழுதி பாஸ் மார்க் வாங்கிவிட்டால் நாம் சந்தோஷம் அடைந்துவிடுவோமே  தவிர அதை ஒழுங்காக நடைமுறைப் படுத்துவது பற்றி கவலைப்படுவதில்லை . அதன் விளைவு தான் நாம்
பின்னடைந்திருப்பதன்  காரணம் என் நான் நினைக்கிறேன் .

Friday, 18 October 2013

அம்மாவின் நினைவு தினம்

இன்று அம்மாவின்  நினைவு தினம் .
எல்லோருக்கும் அவங்க அவங்க அம்மா ஸ்பெஷல்தான் .
ஆனால் நான் எங்க அம்மாவைப்பத்தி ஒரு ஸ்பெஷல்+(பிளஸ் )ஆக நினைப்பது உண்டு.
பல காரணங்கள் இருந்தாலும் என் அம்மா வின் மரணம் சம்பந்தப்பட்ட ஒரு சிலநிகழ்வுகளை  நான் ஒரு Coincident ஆ  அல்லது Pre determinedஆ
  என்ற கோணங்களில் ஆராய்ந்து பார்ப்பதும் உண்டு.
என் முதல் மகனின்  டெலிவரிக்கு என்று எனக்கு ஒத்தாசைக்கு வந்த இடத்தில்  (வட இந்தியாவில் )திடீரென்று மாரடைப்பு வந்து சரியாகி பின் ஒரு நாலு நாள் நன்றாக இருந்து   பின் கடைசியாக ஆசுபத்திரிக்கு கூட்டிக்கொண்டு போகும் வழியிலேயே  எட்டு மாத கர்ப்பிணியான என் நெஞ்சில் சாய்ந்தபடியே    இறந்தார்கள் .
என் நெஞ்சில் அம்மா  சாய்ந்த அந்த உணர்வை  பல வருடம் ஆகியும் ஏதோ நேற்றுதான் நடந்த மாதிரி  என்னால் உடல் உணர்வாலும் மனதாலும்  இன்றும் உணரமுடிகிறது .
கூட இருந்தது நானும் என் கணவரும் மட்டுமே .
என் அப்பா மற்றும் சகோதர பந்தங்கள்  அடுத்த நாள்தான்  சென்னையிலிருந்து  வரமுடிந்தது.

 என் வாழ்க்கையிலேயே முதல் முதலில் ஒரு  இறந்தவர் உடன் அருகில் இருந்து
 ( அதற்கு முன் நான் இறந்த நிகழ்வுகளுக்கு
 போனதே இல்லை )எல்லாவற்றையும் நானே கவனித்தது என்றால் என் அம்மாவின் மரணம்தான்.
மேலும் என் அம்மா தன் அண்ணன் ஒருவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள் . அவர்  அம்மா இறப்பதற்கு ஒரு 12 வருடம்  முன்பே இறந்து விட்டார் .இங்கு சென்னையில் அவருக்கு திவசம் குடுக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும் போது இந்த சேதி போனதும் அப்படியே நிறுத்திவிட்டார்கள் .
அதே நாளில்  (திதியில் ) என் அம்மா வின் அப்பாவின் (தாத்தா  )  இறந்த நாளும் .
அது போல என் அம்மா இறந்த நாள்  ஆங்கில தேதிப்படி என் பிறந்த நாளும் என் கல்யாண நாளும் ஆகும்.( அந்த வருடம் )..
எனக்குள்  நானே  பல முறை கேட்டுக்கொள்ளும் கேள்வி
 இது  Coincident ஆ  அல்லது Pre determinedஆ?

எனக்கு என்று மூளையுடன் ஏதாவது இன்றெல்லாம் நான் செய்துகொண்டு இருக்கிறேன் என்றால் அதற்கு என் பெற்றோர்கள் ,அதிலும் என் அம்மா என்னை ஸ்கூலுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே நிறைய  சொல்லிக்கொடுத்தார்கள்.தமிழ் புலவர்  படிப்பு படித்தவர்கள்.
ஹைஸ்கூல் வரை படித்தவர்கள் என்பதால் ஆங்கில மொழியும் நன்கு தெரியும் .
ஆந்திராவில் தன் அண்ணன்  குடும்பத்துடன்  (அந்தக்காலத்தில் ஆந்திரா தமிழ் நாடு எல்லாம் ஒன்றாக இருந்தது.) இருந்ததால் தெலுங்கு
 மொழியும் தெரியும்.
எம்பிராய்டரி ,குரோஷா  போன்ற வேலைகள் நன்கு பண்ணுவார்கள்
நான் வெளிமாநிலங்களில்  வங்கி  வேலைக்கு     போவதற்கு  மற்றவர்கள்  மறைமுக எதிர்ப்பு செய்தபோதும் தைரியமாக அத்தனை எதிர்ப்புகளையும் தூக்கி வீசி எறிந்து , என்னுடன் கூட தங்க வீடு வாடகைக்கு எடுத்து
 என் அப்பாவையும்    நாங்கள்  வீடு பார்த்து செட்டில் ஆன பின் எங்க  கூட வந்து தங்கவைத்து  என் லட்சியத்தை அடைய உதவிய தெய்வம் .


எப்பவுமே எங்க அம்மா  அடிக்கடி  தன்  கடைசிக் காலத்தில் என்னுடன்தான்  இருக்காபோவதாக எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள் . அதனால்தான் Pre determined டோ  என்றேன்
.அதுபோலவே  கடைசி தருணங்கள் மட்டுமின்றி
 இறந்தபின் அம்மா   அந்த ஸ்தூல சரீரமாக மட்டுமே
இருந்தபோதும் நான்தான் நிறைய நேரம்  அம்மா கூட   இருந்தேன்.      

அம்மா நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் ஆன்மா அமைதியுற
 பிரார்த்திக்கிறோம்  .



.

Thursday, 17 October 2013

பெரிய ஹோட்டலில் Nose catching meals

ஒரு கம்பெனி  வேலை விஷயமாக இரண்டு நாட்கள்  பணி செய்தபோது மதிய உணவு இரண்டு நாளுமே ஆடம்பரமான  ஹோட்டலில்தான் .
அதாவது விலை அதிகமாக உள்ள ஹோட்டலில்.
பொதுவாக  வீட்டில் நான் மிகவும் குறைவாகவே சாப்பிடும் ரகம் .
உடம்பு குண்டாகிவிட்டால் எனது அத்தனை உடைகளையும்   சைஸு பெரிதாக்க வேண்டும்  (இது செய்ய என் உடம்பு வளையாது )
அல்லது புது உடை வாங்கணும் . ( இது செய்ய பணம் அதிகம் செலவாகும் . கட்டுப்படியாகாது).
எனவே என் சொந்த செலவில் சூன்யம் ( ஹோட்டல்களில் சாப்பிடுவது ) வைத்துக் கொள்வது கிடையாது.
ஆனால் இது மாதிரி ஓசியில் உணவு என்றால் கொஞ்சம் நன்றாகவே   எண்ணை பதார்த்தங்களை தவிர மற்றவற்றை ஒரு கை  பார்ப்பேன் .
 சென்ற இரண்டு நாட்களும் அது மாதிரித்தான் .
இரவு உணவை அறவே  உண்ணவில்லை .
மேட்டர்  அது இல்லை .
எத்தனை பேரு பாவம் சொந்த காசு போட்டு சாப்பாடு சாப்பிட்டு போட்டோ எல்லாம் புடிச்சு என்ன அம்சமா  பதிவு போடறாங்க ,ஐயய்யோ  நம்ம ஒரு அருமையான சான்சை கையை வுட்டு நழுவ விட்டுட்டோமே அப்படின்னு தான் ஃ பீலிங்கு  வுட்டுக்கிட்டு இருக்கேன் .

இத்தனைக்கும்  கையிலே காமிரா போன் இருந்துச்சு .
என்னவோ  வேலை நெனப்புலே   (உண்மையை சொல்லன்னும்னாக்க  சாப்பாட்டு நெனப்புலே ) நாமளும் ஒரு பதிவர் ஆயிட்டோம் என்கிற விஷயமே மறந்து போய்விட்டது .

   காலை எழுந்தவுடன் பதிவு என்பதுபோல்  தினம்  பதிவு போடும் நெடு நாள் பதிவர்களுக்கு   என் வாழ்த்துக்கள் .
                                                                                                   
நான்  எப்போதுமே செய்யும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும்  (?......?) ரகம் என்பதால்தான் இப்படி ஆச்சு என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன் .
ஆனால் ஓன்று மட்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன் .

இனி எங்கு போனாலும் காமெராவில் படம் எடுத்துவிடுவது என்று .
சரி சாப்பாட்டு விஷயத்துக்கு வருவோம் .

முதல் நாள்  சியோல் ரெஸ்டாரன்ட் போனோம் .அங்கு முள்ளங்கி கிம்ச்சியும்
வெஜிடபிள் பிரைடு ரைசும் வேறே ஏதோ வெஜிடபிள் சமாச்சாரங்கள் சாப்பிட்டேன் . கோவைக்காய் மாதிரி ஒரு காய் பச்சையாக ( வேகவைக்காத  மாதிரி டைப்பு உப்பா புளிப்பா இருந்திச்சு .அப்புறம் டம்பிளிங் மாதிரி ஒரு ஐட்டம் .அது அவ்வளவு நல்ல இல்லே .ஐஸ்கிரீம்  சூப்பராக இருந்தது.

அடுத்த  நாள்  சிறுசேரி அருகே உள்ள ஏஷியானா  ஹோட்டலில். மதிய உணவு.
ப ஃ பே உணவு .
முதலில்  மஷ்ரூம் சூப்பு .
பிறகு குட்டி  உளுந்து போண்டா , புதினா சட்னி
கீரை  ( ரொம்பவே சூப்பர் )
தால்.,பனீர் ஃ பிரை.கத்திரிக்கா சாம்ரோட்,பொட்டடோ ஃ பிரை  (சுமார்தான்)கிட்டத்தட்ட ஒரு பதினைந்து விதமான காய்கறிகள் .எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் டெஸ்டு   (டேஸ்டு ?)
பண்ணினேன் .

அப்புறம் ஒரு குட்டி கேக் சைசில்  ஒரு பன் வெண்ணையுடன் .
பச்சை காய்கறிகளில் சாம்பிளுக்கு  என்ன இருந்ததோ அதில் எல்லாம் ஒரு ஒரு துண்டு.


வெஜிடபிள் பிரைடு ரைசு ஒரு கரண்டி மட்டுமே சாப்பிட முடிந்தது.
ரோட்டி ,நாண் சாப்பிடவில்லை .
நாக்கு சாப்பிடு என்று சொன்னாலும் வயிறு " stomach ஃ  புல் "   போர்டு  மாட்டிருச்சு  .


 இனிப்பு வகையறாவில்   இதுவரை சாப்பிடாத ஐட்டம்  ரெண்டு மட்டும் .
பேர் மறந்துவிட்டது
 (பேர் எல்லாம்  எழுதியிருந்தார்கள் , எனக்குதான்   வேலை பற்றிய கடமை ........ ஒகே  ஓகே  புரிந்தால் சரி)
கிரிணிப்பழம்.,பைனாப்பிள் ,தர்பூஸ்  எல்லாவற்றிலும் தலா மூன்று துண்டுகள் .

ஜூஸ்  ஒரு கிளாசு .

ஐஸ் கிரீம் வேணுமான்னு கேட்டார்கள் .
டீ., காஃ பி வேணுமான்னு கேட்டார்கள் .

வருத்தத்தில்  மனசு  நொர்....ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் . ( நொறுங்கும் சத்தம் ) .

 உலகத்திலே என்னென்னவோ கண்டு பிடிக்கிறார்கள் .
 (தேவைப்பட்ட போது )அதாவது இது மாதிரி நல்ல உணவு கிடைக்கும்போது
 வயிறு சைஸு  ஜாஸ்தி பண்ணிக்கிற மாதிரியும் ,சாப்பாட்டுக்கு வசதி இல்லாதபோது வயிறு சைஸு டொய்ங் ன்னு உள்ளே அமுங்கிறமாதிரியும் ஒரு   வழி  கண்டுபுடித்தால் மனித குலமே வாழ்த்துமே !

பெரிய மனிதர்களைத் தோற்கடிப்பவர்கள் நிஜமாகவே பெரிய மனிதர்களாக ஆகிவிடுகிறார்களா ?

 ரெண்டு நாளைக்கு முன்பு பஸ்ஸுக்கு காத்திருந்த போது  ரோடில் போய்க்கொண்டு இருந்த இரண்டு பேர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் .

அதில் ஒருவர் வீரபாண்டியக்கட்டபொம்மன் ஸ்டைலில்  வீர வசனம் பேசிக்கொண்டு இருந்தார். யாரை என்று சரிவரப் புரியவில்லை சமூகத்தில் பெரிய  அந்தஸ்த்தில் உள்ள   தனது கம்பெனி தலைவராக இருப்பார் போலும்  .ஒரு ஆளை "அவன் என்ன பெரிய  இவனா  இவனை தோக்கடிச்சு  இவனை சீனை வுட்டே ஓட வைக்கிறேன் பாரு ,காணாம போக வைக்கிறேன் பாரு !"    என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார் .
பக்கத்தில் இருந்த ஆளும் கூட  வாயாலே  பெட்ரோல் ஊத்தி ஊத்தி  நல்லாவே கொளுத்தி எரியவிட்டுக்கொண்டிருந்தார்.
 கடைசியா வீரபாண்டியக்கட்டபொம்மன் டயலாக் தன்  நண்பரிடமிருந்து விடை பெற்றுப் போகும்போது ஒரு கொலை வெறியோடு தான் போனார் .

ஏனென்று தெரியவில்லை இந்த பேச்சு என் மனதில் திரும்ப திரும்ப
 டி.வி  விளம்பரம் மாதிரி பல  ( சும்மா ஒரு பேச்சுக்குத்தான் " பல" ன்னு  போட்டேன் ,நான் ரொம்ப பிசி ஆளு ன்னெல்லாம் நினைச்சிடாதீங்க )வேலைகளுக்கு நடுவிலேயும்  என்ட்ரி குடுத்துக்கிட்டே இருந்தது.
 யோசிச்சுப் பாத்தேன்.
பெரிய மனிதர்களைத் தோற்கடிப்பவர்கள் நிஜமாகவே பெரிய மனிதர்களாக ஆகிவிடுகிறார்களா ?

 பெரிய மனுஷன்னு நான் நினைக்கிற மனிதர்களில் நெப்போலியன் பொனபார்ட்  பிரதானமானவர். அவரை வாட்டர்லூ  போரில் தோற்கடித்த டியூக்  ப் வெலிங்டனை   நினைவில் வைத்திருப்பவர்களை விடவும் நெப்போலியன்  போனபார்டை  நினைவில் வைத்திருப்பவர்களே அதிகம் .
நெப்போலியன் பொன்மொழிகள்  என்பதுபோல் டுயூக்  ப் வெலிங்டன் 
பொன்மொழிகள் உள்ளதா என்று தெரியவில்லை .
 பெருந்தலைவர்  காமராஜர்  பற்றி  இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால் அவரைத் தேர்தலில்  தோற்கடித்தவரைப் பற்றி யாருமே பேசுவதில்லை.

 இது போலவே வின்ஸ்டன் சர்ச்சிலை தோற்கடித்தவர் . திருமதி இந்திரா காந்தி .செல்வி ஜெயலலிதா இவர்களைத் தோற்கடித்தவர்களை எல்லாருமே  மறந்துவிட்டனர்.

எனவே ஒரு பெரிய மனிதரைத் தோற்கடிப்பதில் நேரம் செலவு செய்வதை விட   நமது தகுதியை வைத்து நாம் பெரிய ஆளாவது தான் முக்கியம் போலே .  
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Friday, 11 October 2013

வேலை செய்ய ஆரம்பித்த ஆட்டோ மீட்டர் வாழ்க !

ஆட்டோ  மீட்டர் என்ற ஒரு சாதனம் ஆட்டோ வில் இது வரை பொருத்தப்பட்டு இருந்தாலும் அது இது வரை ஆட்டோவின் ஒரு அலங்காரப் பொருளாகவே இருந்தது.
ஆட்டோ வின் உள்ளே ஒரு காலை வைத்தாலே 30 ரூபாய் என்று தான் கேட்பார்கள். ரெண்டு காலையும் வைத்தால் நமது சொத்தையே விற்றால்தான் ஆட்டோ சவாரி செய்யமுடியும் என்பது போல ஒரு ரேட்டு சொல்வார்கள் .

ஒரு முறை நான் ஆட்டோகாரரிடம்   அசோக் பில்லரிலிருந்து சென்ட்ரல் போக எவ்வளவு என்று கேட்டேன்
ரூபாய் 300/- என்றார் .
 என்னப்பா கடைசியில் பாங்கு  லோன் போட்டாத்தான் ஆட்டோவில்  ஏறமுடியும் போல  ரேட்டு சொல்றியே என்றேன்.
ஆட்டோக்காரரே  சிரித்துவிட்டார் .
இல்லம்மா , திரும்பி வரும்போது காலியாத்தானே வரணும் என்பார்கள் .

அது ஏன் அவர்கள் நாம் ஏறும்  அதே இடத்துக்கு திரும்ப வரணும்  என்ற லாஜிக் எனக்கு புரிவதே இல்லை .
இதே போல பஸ்,ரயில் ,விமானம் இவற்றில் இவர்கள் பயணம் செய்யும்போது டபிள் சார்ஜு வாங்கினால் ஒத்துக்கொள்வார்களா ?
வெட்டி விவாதங்களால் நாலு காசு நமக்குப் பிரயோசனம் இல்லை என்ற தெளிவு எனக்கு   உண்டு .
 அதனால்  ஆட்டோவில் ஏற ரொம்பவே யோசித்துதான் ஏறுவேன் .
தவிர்க்க முடியாத காரணம் இருந்தாலொழிய ஆட்டோவை  தவிர்ப்பேன் .

ஏனென்றால்  உதாரணமாக   2004ம் வருடத்தில் கும்பகோணத்திலிருந்து
 சென்னை வர ரூபாய் 90 லிருந்து 140 ரூபாய்  பஸ்ஸை பொறுத்து மாறும் .ஆனால் கிண்டி கத்திபாரவிலிருந்து கே.கே,நகர் வர ரூபாய் 100 ஆகும்.
ரொம்ப வேடிக்கை யாக இருக்கும். (வேதனை? )

இப்பொழுது அங்கங்கே
"உங்கள்  வழிப் பயணச்  செலவு
எங்கள் வாழ்க்கைச் செலவு "
என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அதையே நாம் பயணிகள்  சொல்வது மாதிரி  திருப்பிப் போட்டுப் படித்துப் பாருங்கள் .

"உங்கள் வாழ்க்கைச் செலவு
எங்கள் பயணச் செலவு "

இதுதான் உண்மை  நிலையாக இருந்தது.

 ஆனால் இப்போது நிலைமை பரவாயில்லை .
அண்ணா பல்கலைக்கழகம்  (கிண்டி) யிலிருந்து அசோக் பில்லர் வர 150/- ரூபாய் கொடுத்து வந்த நான் இப்போது ரூபாய் 75லிருந்து ரூபாய் 85 வரை  கொடுத்து வருகிறேன் . எந்த அளவுக்கு மக்கள் நஷ்டம் அடைந்து  இருக்கிறார்கள்  பாருங்கள் .
மீட்டர் போட்டால்   மட்டுமே ஆட்டோவில் ஏறுகிறேன்.
இதே நிலை தொடர்ந்தால் மக்களும் பயனடைவார்கள் .ஆட்டோ ஓட்டுனர்களும்  பயனடைவார்கள் .

Monday, 7 October 2013

தாசில்தார் உத்தியோகம் .

தாசில்தார் உத்தியோகம் என்பது ஒருகாலத்தில் பட்டி தொட்டி பட்டணம்  எல்லாம் ரொம்ப மதிப்பாகப் பேசப்பட்டது.இந்தக் காலத்தில் ஐ.டி கம்பெனிகளும் அம்பானிகளும் வந்தபின்  பட்டணங்களில் பெரிய அளவில் பேசப்படுவதில்லை என்றாலும்   மொ ஃ பசலில்  தாசில்தார் உத்தியோகத்தின் மவுசு அவ்வளவாகக் குறையவில்லை . (பல வெரைட்டி யான சர்டிபிகேட்டும்  வாரி வழங்கும் சூப்பர் மார்கெட்டு  அந்த தாசில்தார் உத்தியோகம் )

ஒரு பழமொழி கூட உண்டு . தான் விதியை  தானே நொந்துக்கும்போது    "ஆசை இருக்கு தாசில் பண்ண அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க " என்று சொல்வார்கள்.
. இந்த தலைப்பில் ஒரு நாடகம் கூட வந்த ஞாபகம் .
அதே போல் வீட்டில் ஏதாவது வேலை சொல்லி நாம் பிசியால் ( சாக்கு போக்கு சொல்லி )செய்யாமல் இருந்தால்  "ஆமா பெரிய தாசில் உத்தியோகம் தட்டுகேட்டு போவுது ,ஒழிசல் பேர்வழி என்று குடைச்சல் குடுப்பார்கள்.

இப்பொழுதெல்லாம்  தாசில்தார் உத்தியோகம் பற்றி அவ்வளவாக  யாரும் பேசுவதில்லை . ஆனால் நான் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு பழமொழி " தாசில்தாருக்குத்தான்  தாசில் வேலை போச்சு சமையல்காரனுக்கு  சமையல் வேலை போகலையே !" என்பேன் .
இந்தப் பழமொழி யின் பின்னே  ஒரு சுவாரசியமான கதை உண்டு.
ஒரு ஊரில் ஒரு   தாசில்தார்  இருந்தார் . அவருக்குக் கல்யாணம் ஆகலை .அவர்கிட்டே ஒரு சமையல்காரர் இருந்தார் .  தினம் தாசில்தாருக்கு சாம்பார் ,ரசம் ,கூட்டு ,பொரியல்,அப்பளம் வடை இனிப்பு என்று ஒரு ஐட்டத்தில் கூட குறை வைக்காமல் ருசியாக பார்த்து  பார்த்து    சமையல் செய்து போட்டார்.

ஒரு நாள் தாசில்தார்  ரிட்டயர் ஆகிட்டார் .அவருக்கு சம்பளம் குறைந்ததும் ரொம்ப கவலை வந்துவிட்டது.
 அதனால் சமையல்காரரிடம்  இனிமே நாளைலேருந்து  சாம்பார் இல்லாட்டி ரசம் ஏதாச்சும் ஒண்ணு போதும்.அதே  மாதிரி  கூட்டு  பொரியல் ரெண்டும் வேணாம்.ஏதாவது ஒண்ணே போதும்.இனிப்பு வெள்ளிக்கிழமை மட்டும் செஞ்சா  போதும். மத்தபடி அப்பளம் ஞாயித்துக்கிழமை  மட்டும் போதும்.எல்லாம் விவரமா விளக்கமா சொல்லிட்டார்.

ஒருமாசம் கழித்து கணக்கு பாத்தா சாப்பாட்டு செலவு ஒண்ணும் கணிசமா குறையவில்லை .

தாசில்தார்  தலையிலே ஏகப்பட்ட இடியாப்பம் .
குழம்பிட்டார் .

சரி சமையக்காரர் கிட்டே விவாதிக்கலாம் என்று போனால்  தாசில்தாருக்கு ஒரே ஷாக் !
சமையக்காரர்  தலை வாழை   இலையில்    சாம்பார் ,ரசம் ,கூட்டு ,பொரியல்,அப்பளம் வடை இனிப்பு  என்ற சகல  ஐட்டங்களுடன்
 குறை ஒன்றும் இல்லை என்று    சப்பு கொட்டிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்   .
தாசில்தார்  சமையக்காரர் கிட்டே
" என்ன சமையல்காரரே , நான் சிக்கனமாக இருக்கனுமின்னு ஐட்டமெல்லாம் குறைச்சுட்டு சாப்பிட்டுகிட்டு இருக்கேன்    நீங்க பாட்டுக்கு கல்யாண விருந்து மாதிரி ஜமாய்ச்சுகிட்டு இருக்கீங்க? ."
சமையல்காரர் சம்பிரதாயப்படி  சாரி பூரி  எல்லாம் சொல்லலை .
கொஞ்சம் கூட அலட்டிக்காம செம கூலாக
"சார் !தாசில்தாருக்குத்தான் தாசில் வேலை போச்சு , சம்பளம் குறைஞ்சு போச்சு அவர் சாப்பாட்டை குறைச்சுகிறது நியாயம் . சமையல்காரருக்கு அவர் வேலையும் சம்பளமும் அப்படியே இருக்கும்போது அவர் ஏன் சாப்பாட்டை குறைச்சுக்கணும்?"
தாசில்தார் வாயே திறக்கலை .
என்னை யாராவது  சம்பந்தா சம்பந்தமில்லாமல்  என்  அடிப்படை சௌகரியத்தை குறைச்சுக்கோ ,என்றால் நான் எப்போதும் தாசில்தாருக்குத்தான்  தாசில் வே
லை போச்சு சமையல்காரனுக்கு  சமையல் வேலை போகலையே !" என்பேன் .
இதே மாதிரி காரியம் முடிஞ்சதும் என்னை டீலில் விட்டு விட்டு கழண்டுக்கும்
பேர்களையும் பார்த்து என்னை  கிணறு இன்ஸுபெக்டு  பண்ண போன    தாசில்தார் மாதிரி விட்டுட்டீங்களே என்பேன்.

இதற்கும் பின்புலத்தில் ஒரு காமெடி கதை இருக்கு .

ஒரு படு நேர்மையான தாசில்தார். அவர் வேலை பார்த்த  ஊரிலெ   கிணறு  வெட்டிகிட்டு இருந்தாங்களாம் . இவரு அந்த வேலை எப்படி நடக்குதுன்னு  பாக்க கிணத்துக்குள்ளே இறங்கி பாத்துக்கிட்டே இருக்கார்.கிணற்றின்    மேலே அவரின் கீழ் வேலை பார்ப்பவர்கள்  ஒரு கயிறு கொண்டு அவரைப் பிடித்துகொண்டு இருக்கிறார்கள் . வெளியே  ஏதோ சத்தம் கேக்குது .தாசில்தாருக்கு  என்ன நடக்குதுன்னே புரியலே .
"திடும்"னு  பிடிச்சுக்கிட்டிருந்த கயிறை அப்படியே விட்டுட்டு  ஓடிட்டாங்க .
கீழே விழுந்த தாசில்தாரை அப்புறமா அந்த பக்கம் வந்த அந்த ஊர்  ஆள் ஒருத்தர் காப்பாத்தினாரம்  .
 "ஏன் கயிறை வுட்டுட்டு  ஓடிட்டீங்க" ன்னு  அவரின் கீழ் வேலை பார்ப்பவர்களைக்  கேட்ட  போது அவர்கள் சொன்ன பதில்.
 "புது தாசில்தார் சார்ஜு எடுக்க வந்துட்டார் ன்னு கேள்விப்பட்டோம்  .அதான் அவரை வரவேற்க  ஓடிட்டோம் ."
தாசில்தார் உத்தியோக நிலைமையை பார்த்தீங்களா ?

Saturday, 5 October 2013

ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை

நாம் சிரித்தால் தீபாவளி .


தெள்ளு தமிழ் பேசும் தமிழகத்தில் 
தீமையை அழிக்க திக்கெட்டும் தீப 
ஒளி ஏற்றும் நாள் தீபாவளி .

கவினுறு காவுடை காஷ்மீரத்தில் 
காவலையும் கட்டுக்களையும் மீறி குண்டு
வைத்து கண்ட மேனிக்கு தீபாவளி .

பல நாடுகளில் பன் முறையும் பாவம் 
பார்க்காது பகைமையாலும்   பதிலடியாலும்   
பரிதவிப்போருக்கு  பன்னாட்கள்  தீபாவளி .

 மக்களை மகிழ்விக்க மருந்துகள் பல
 கொண்டு உருவாக்கும் தொழிலாளிக்கு
கை தவறினால் மரணத் தீபாவளி .
உலகில் 
பகைமை மறைந்து அமைதி நிலவி 
வறுமை ஒழிந்து வளமை பெருகி 
 சிரிக்கும் நாளே  நல்ல தீபாவளி 

 My blog is abayaaruna.blogspot ,com
 Name UmaMaheswari

Friday, 4 October 2013

தனி ஒரு மனிதனுக்கு மைதா இல்லையேல் ஜகத்தினை ......

மைதா மாவு உபயோகிக்கலாமா கூடாதா  என்ற  சர்ச்சை மிளகாய் மிளகாக  ஹி ஹி அதான் மிகவும் கார சாரமாக விவாதிக்கப் பட்டு வரும் இந்நாளில் நான்  மைதா மாவுக்கு ஆதரவோ எதிர்ப்போ சொல்லப்போவதில்லை .

 (எப்படி சொன்னாலும் இன்னொரு குரூப்பு
நம்மளை அடிக்கும் . ஏன்னா  இப்ப எல்லாம் ஒரு குரூப்பாத் தானே இருக்காங்க வயசான காலத்திலே எதுக்கு வம்பு ?)


மைதா மாவை  அதற்கு  எதிரான   போராட்டங்களுக்கு  செவி சாய்த்து தடை செய்தால் என்ன ஆகும் என்று தான் நான் ஆராய்ச்சி செய்தேன்.
நிறையப்பேர் புரோட்டா  (பரோட்டா) பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்
 .
 மைதாவை  தடை செய்தால் பலியாவது  புரோட்டா  (பரோட்டா) மட்டுமில்லை.

முதல் முதலில் "ஹேப்பி  பர்த்டே "அன்று கேக்கு சாப்பிடமுடியாது.
ரொம்பவும் கிரியேட்டிவாக செய்யும் பல கேக்குகளுக்கு டைனோசருக்கு ஏற்பட்ட தலை விதியே நேரும்.

 அதை தயார் செய்யும் பல தொழிற்சாலைகளும் மூடும் அபாயம் உள்ளது.பலர்  வேலை இழக்க நேரிடும் .பிறகு திருட்டுத்தனமாக வெளிநாட்டிலிருந்து கேக்குகளை கடத்திக்கொண்டு  கொண்டுவருவார்கள்.
ஏர்போர்ட்டில் கேக்கு கடத்திக்கொண்டு வரும் மக்கள் பிடிபடுவார்கள். (தங்கம் கடத்திக்கொண்டு வந்து பிடிபடுவது போலே )
கேக்குகள் மறைமுகமாக விற்பனை ஆகும் .

இதே போல்  பிரெட்  சான்ட்விச் பிஸ்கெட்டு சமோசா ,பஃப் ,போளி. குலொப்ஜாமூன் ,சூரியகலா ,சந்திரகலா போன்ற மைதாவை மூலப் பொருளாக வைத்து தயார் செய்யும் பல இனிப்பு வகையறாக்களுக்கும் தடா வந்துவிடும்.
அது சம்பந்தமான பல ஓட்டல்களும் நசியும்.அவற்றில் ஈடுபட்டுள்ள  தொழிலாளர்களும் வேலை இழக்க வேண்டிவரும்.


இவற்றுக்கெல்லாம் வயது வித்தியாசமின்றி  பழகிவிட்ட நமது நாக்குகள் இதை வரவேற்குமா?(பிளாஸ்டிக்  பைகளுக்கு  அடிமையாகிவிட்ட  மாதிரி )

யாராவது இதற்கென்று  தனி ஒரு மனிதனுக்கு மைதா இல்லையேல் ஜகத்தினை .அழித்திடுவோம் .....என்று ஒரு பொதுநல வழக்கு ஒன்று போடுவார்கள்.
பஸ் ஸ்டாண்டுகளிலும்  ,ரயில்வே ஸ்டேஷனிலும்  ,வெட்டியாக டைம் பாஸ் செய்ய நேரம் கிடைக்கும்போது இந்த மேட்டர்   நன்றாக அடித்து துவைத்து அலசப்படும்.
பல டி.வி சேனல்களுக்கு சூப்பர் மேட்டர்    கிடைத்தது  .சமுகத்தின் பல தரப்பினரும் இந்த விவாதத்தில் பங்கேற்பார்கள்.

  மூளை உள்ளவர்கள் , மற்றும் பிழைக்கத்  தெரிந்தவர்கள் கருமமே கண்ணாக சர்க்கரைக்கு மாற்று ஒன்று கண்டுபிடித்த மாதிரி மைதாவுக்கும் ஒரு மாற்று மைதா கண்டிபிடிப்பார்கள் .

பிறகு கடைசியில் சிகரெட்டு மாதிரி பொடியான எழுத்துக்களில் "மைதா உடல் நலத்திற்கு கேடு "  என்று " சுபம்  " போடப்பட்டுவிடும்.

 

Thursday, 26 September 2013

பேதி மருந்து

இந்த காலத்து மக்கள் ஸுக்கு இந்த அனுபவம் சுத்தமாக இருக்கவே இருக்காது என்று நம்புகிறேன். நாங்களெல்லாம் சின்னக்குழந்தை ஆக இருந்த போது  எப்படி அரை ஆண்டுத்தேர்வு முழுஆண்டுத் தேர்வுகளிலிருந்து தப்புவது என்பது   முடியாதோ அது போல வருடம் இரு முறை இந்த பேதி மருந்திலிருந்து தப்ப முடியாது  என்பது பிரம்மா தலையில் எழுதிய எழுத்து .எந்த சாஃப்ட் வேராலும்
அழிக்கவே முடியாது.
ஒருசுப யோக ஞாயிற்றுக்கிழமைதான் பொதுவாக இதற்கென்று தேர்ந்து எடுப்பார்கள் .அதாவது யாருக்கும் பரீட்சை  இல்லாத நாள் ,அமாவாசை பரணி கார்த்திகை  போன்ற நாள் நட்சத்திரம்  எல்லாம் பார்த்து முகூர்த்த தேதி குறிப்பதற்கு எவ்வளவு கவனம் எடுப்பார்களோ  அந்த ரேஞ்சுக்கு பேதி மருந்து சாப்பிட  நாள் குறிப்பார்கள் .


எங்க அப்பா ரொம்பவே கோபக்காரர் .மருந்து சாப்பிட தகறாரு பண்ணினால் நம்மளை அடிக்க மாட்டார் ,கையில் அகப்பட்ட சாமானை கீழே போட்டு உடைத்துவிடுவார் .அது முகம் பார்க்கும் கண்ணாடி யாக இருந்தால் அதை அள்ள வேண்டிய வேலை அம்மாவுக்குத்தான் , பாவம் அம்மா.நிறைய முறை கண்ணாடி அள்ளியிருக்கிறார்கள் .

அந்த மருந்தை முழுங்கவே  முடியாது.எங்களைச் சொல்லிக் குற்றம் இல்லை.இது பற்றி பட்டி மன்றம் நடத்தினால்  அது சர்வ நிச்சயமாக மருந்து கம்பெனி செய்த குற்றமே என்று எப்படியாகப் பட்ட நடுவரும் தீர்ப்பு  சொல்வார்கள் ,என் கசப்பு உன் கசப்பு இல்லை அப்படி ஒரு கசப்பு கசக்கும் பாருங்கள். விவரிக்க வார்த்தைகளே இல்லை.

எப்படியோ எங்க பெரிய அக்கா மட்டும் மூக்கை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு ( மூக்கை அழுத்திப் பிடித்துக்கொண்டால் வாயில் முழுங்கும்போது கசப்பு தெரியாதாம்.கண்டுபிடிப்பு ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு இருக்கில்லே   )குடித்து விடுவார்கள் .நானும் எங்க சின்ன அக்காவும் அந்த டெக்னிக்கை ட்ரை  பண்ணினோம் .
ம்ஹூம்  தோல்வி தான்.
மூக்கை பிடிப்பதிலும் சில லாவகங்கள் உண்டு என்பதே பிற்பாடுதான் புரிந்தது. மூக்கை  சரியாகப் பிடிக்காவிட்டால் நாக்கில் overstay
பண்ணிகொண்டிருக்கும் மருந்து மூக்கு வழியாக வந்து மூக்கே கசக்க ஆரம்பிப்பது போன்ற ஒரு உணர்வு வரும்.கொஞ்சம் சர்க்கரை குடுப்பார்கள்

சில சமயங்களில் சர்க்கரையை முதலில் சாப்பிட்டு பின் மருந்து சாப்பிடுவோம் .என்ன  ஜாலம் பண்ணினாலும் அந்த கசப்பு வாயிலேயே  குறைந்தது ஒரு மணி சாவகாசம் குடியிருந்து விட்டுத்தான் போகும்.
மருந்து உள்ளே போனதும் வேலை ஆச்சு என்று நிம்மதியாக இருக்க முடியாது.
சில .......... சில என்ன பல சமயங்களில்  வாந்தி வரும் ,
அவ்வளவு தான் .
மறுபடியும்  முதலிலே இருந்துதான் .
அடுத்த படியாக toilet  போனியா போனியா என்று உயிரை வாங்குவார்கள் . அடுத்த படியாக அது தொடர்பான பல கேள்விகளை ( நாகரிகம் கருதி விலாவாரியாக எழுதவில்லை )  கேட்டு மீதம் இருக்கும் உயிரையும் வாங்கிய பிறகு  அடுத்த கொடுமை மிளகு ரசம் போட்ட சாதம் தான் அன்று .
பல முறை toilet யாத்திரை போய் நாமே ஒரு வழியாக ஆகிவிடுவோம் .
நம்மளை ஒரு வழியாக ஆக்கியபின் தான் பெற்றோருக்கே ஒரு நிம்மதி வரும் போலே!
ஒரு ஐந்து ஆறு வயது வரை தான் (விவரம் புரியாத வயதில்லையா)நான் என் பெற்றோர்களை படுத்தினேன் . பிறகு படுத்தவே இல்லை 
எனக்கென்று பேதி மருந்து சாப்பிடுவதில் ஒரு தனி பாணி ஏற்படுத்திக்கொண்டேன் 
.ரொம்ப சமர்த்தாக மருந்து குடித்துவிடுவேன். 
என்னை ஒரு முன் மாதிரியாகக் கூட சொல்லிக்  கொண்டிருந்தார் என் அப்பா.
அதன் ரகசியத்தை எங்க அப்பா விடம் கூட   (93 வயது வரை வாழ்ந்தார்) சொல்லவில்லை .
அந்த டெக்னிக் பற்றி தெரிந்து கொள்ள நீங்களும் ஆவலாக உள்ளீர்கள் இல்லையா ?
உங்களுக்குச் சொல்லாமலா ?
இப்பொழுது சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் .
மருந்தை வாங்கி நாமே வாயில்  ஊற்றிக் கொள்ளவேண்டும் .
அம்மாவையோ அப்பாவையோ இந்த விஷயத்தில் கண்டிப்பாக நம்பவே கூடாது.
 மருந்தை  வாயில்  ஊற்று வது போல் பாசாங்கு செய்ய வேண்டும் .
ஆனால் மருந்தை முழுங்கக் கூடாது .
மருந்து கசந்தால் என்ன மாதிரி நடிக்கணுமோ  அப்படி நடிக்கணும் . சொதப்பினால் நாம் அவுட்டு.
மறக்காமல் மருந்து சாப்பிட்ட டம்ளரை நாம்தான் கழுவி வைக்கணும் .
Out sourcing  கூடவே கூடாது.
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் என்ற உண்மையை மறந்திடக்கூடாது.

மூன்றாவது முக்கிய பாயிண்டு      toilet   பக்கம் அடிக்கடி  ஓடவேண்டும்.
டயர்டாக இருப்பது மாதிரி பாவ்லா எல்லாம் காமிக்கணும் .
எப்படியோ நம்ம மேலே சந்தேகம் வராதபடிக்கு சந்தர்ப்பத்தைப் பொறுத்து நடிக்கணும்.
 இப்படியே ஒரு மூன்று வருடம் ஓடியது .
கொஞ்சம் வளர்ந்த பின் டெஸ்ட்  பரிட்சை அது இது என்று தப்பித்தது பெரிய கதை.



Tuesday, 24 September 2013

திண்டுக்கல் தனபாலன்: நீயே உனக்கு என்றும் நிகரானவன்

திண்டுக்கல் தனபாலன்: நீயே உனக்கு என்றும் நிகரானவன்: வணக்கம் நண்பர்களே... நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் : தோல்விகள் மட்டுமல்ல... துன்பங்களும் தான்... படிக்காதவர்கள் Click → இங்கே கண்ணொளி PLAY ...

"இளமை "ஆங்கில கவிதை

"இளமை " என்னும் ஆங்கில கவிதை ,. இது ஒரு ஆங்கில கவிதையாக இருந்தபோதிலும்ஆச்சரியப் படத்தக்க வகையில்   இது ஆங்கிலேயர்களை விடவும் ஜப்பானியர்களை மிகவும் கவர்ந்த கவிதை .
இந்த கவிதை சாமுவேல் உல்மேன் என்ற அமெரிக்கரால் இயற்றப்பட்டது.
இது அவரின் 77வது வயதில் எழுதப்பட்ட கவிதை .இந்த கவிதை அவர் இறந்த பின் ஜெனரல் டக்லஸ் மெக் ஆர்தர்  என்ற வரால் அவரது டோக்கியோ அலுவலகத்தில் ஃ பிரேம் பண்ணி தொங்கவிடப்பட்டு இருந்தது.
அவர் அடிக்கடி தனது பேச்சுகளிலும் இந்த கவிதை வரிகளை மேற்கோள் காட்டுவார்.இந்த கவிதைவரிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஜப்பானியர்கள் இதை மனப்பாடம் செய்து கொண்டனர். பானசோனிக்  கம்பெனி தலைவர் மத்சுசிதா தன்னை  இந்த கவிதை பெரிதும்  ஊக்குவித்தது என்பார். பிரபல அரசியல்வாதிகளும்  பத்திரிகையாளர்களும் கூட இந்த கவிதையை  மேற்கோள் காட்டுவார்கள்.
பல பள்ளிகளில் இந்த கவிதையை கட்டாயமாக மனப் பாடப்பகுதியாகாவும் ஆக்கினார்கள்..
இந்த கவிதை பற்றி நான் சுமார் 20 வருடக்களுக்கு முன்பு ஜப்பானிய மொழி படிப்பேன் என்று கனவில் கூட நினைத்துப்பார்க்காத கால கட்டத்தில்  ரீடர்ஸ் டைஜஸ்ட் டில் படித்தேன்.மனதின் ஒரு ஓரத்தில் "மெமொரி "யில் ஸ்டோர் பண்ணி வைத்திருந்தேன்,  பல முறை அந்த கவிதையை எங்கே தேடுவது என்று தெரியாமல் பிறகு இன்று எதேச்சையாக  ஏதோ ஞாபகம் வர  நெட்டில்  துழவினேன் . ஜப்பானியர்களை ஊக்குவித்தத கவிதை என்று மட்டும் தான் தெரியும்.
மற்றவைகளை மறந்துவிட்டேன்,பிறகு ஒரு வழியாக   "கண்டேன் சீதையை "தான் .
 இதோ அந்த கவிதை.
YOUTH POEM

By: Samuel Ullman

    Youth is not a time of life - it is a state of mind, it is a temper of the will, a quality of the imagination, a vigor of the emotions, a predominance of courage over timidity, of the appetite for adventure over love of ease. Nobody grows old by merely living a number of years. People grow old only by deserting their ideals. Years wrinkle the skin, but to give up enthusiasm wrinkles the soul. Worry, doubt, self-distrust, fear and despair - these are the long, long years that bow the head and turn the growing spirit back to dust. Whether they are sixteen or seventy, there is in every being's he
    art the love of wonder, the sweet amazement at the stars and starlike things and thoughts, the undaunted challenge of events, the unfailing childlike appetite for what is to come next, and the joy and the game of life. You are as young as your faith, as old as your doubt; as young as your self-confidence, as old as your fear, as young as your hope, as old as your despair. When the wires are all down and all the innermost core of your heart is covered with the snows of pessimism and the ice of cynicism, then you are grown old indeed. But so long as your heart receives messages of beauty, cheer, courage, grandeur and power from the earth, from man and from the Infinite, so long you are young.

ஹைதராபாத் கடுகு

நாங்கள் ஹைதராபாத்தில் குடியிருந்த போது நானும் வேலைக்குப் போய் கொண்டிருந்த படியால் குழந்தைகளை பார்த்துக் கொள்ள தஞ்சை மாவட்டத்திலிருந்து ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு  வந்திருந்தோம் .அவள் பிறந்து வளர்ந்தது  எல்லாம் தமிழ் நாடாக இருந்த போதிலும்  ஹைதராபாத் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்.
ஹைதராபாத்தில் வேர்கடலை நான்கு நான்கு  பருப்புகளாக இருக்கும் . அங்குள்ள துவரம்பருப்பு ரொம்பவே ருசியாக இருக்கு ,அந்த ருசி நம்மூர் பருப்புக்கு வரவே வராது ,அந்தூர் அரிசி அப்படியே சாப்பிடலாம் தொட்டுக்கறதுக்கு ஒன்னும் கூட வேண்டாம் ,என்று சொல்லுவாள்.பிறகு அங்கிருந்து மாற்றல் ஆகி சென்னை வந்த பின் நான் யாரையும் வீட்டோடு வைத்துக்கொள்ளவில்லை .
மறுபடி எனக்கு ஒரு முறை உடல் நலம் குன்றிய போது என் அப்பா அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.ஆபிசுக்கு லீவு போட முடியாததால் அவளை ஒரு  மாதம்உதவிக்கென்று வைத்துக்கொண்டேன் . என் கணவர் வெளி மாநிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததால் எனக்கும்  உதவி தேவைப்பட்டது.
அப்பாவும் அவளும் ஒரு செவ்வாய்கிழமை வந்தார்கள் .அன்று ஒரு கல்யாண ரிசப்ஷன் இருந்ததால் நான் வீட்டில் சாப்பிடவில்லை.
அவள் இரவு தோசை செய்திருக்கிறாள் .ஆனால் தேங்காய் சட்னி என்னவோ நல்லாவே இல்லை சட்னியில் என்னவோ பிரவுன் கலரில்  மிதந்தது  என்று என் பசங்கள் இருவரும் குற்றப்பத்திரிகை வாசித்தார்கள் .அதற்கு அவள் இந்தூர் கடுகே சரியாகப் பொரியமாட்டெங்குதும்மா  ஹைதராபாத் கடுகு எண்ணையிலே போட்ட என்னமா பட பட என்று பொறியும் .இந்தூர் கடுகு அப்படியே  பூத்து வருதும்மா என்றாள்.
எண்ணையை ஒழுங்கா காய வை அப்புறம் கடுகு போட்டு பொறி ன்னு சொல்லிட்டு நான் பசங்களுக்கு பாடம் சொல்லிகொடுக்க போய்விட்டேன் .
காலையும் மதியமும் எப்போதுமே சப்பாத்திதான் . அது நான் செய்து விடுவேன்
புதன்கிழமை பசங்கள் திட்டவட்டமாக சட்னியில் கடுகு போடாதே என்று சொல்லி விட்டார்கள்
வியாழக்கிழமை அன்று சாயந்திரம் இருவரையும் என் அப்பா கட்டாயப்படுத்தி சாம்பார் சாதம் சாப்பிடவைத்த  போது வேண்டா வெறுப்பாக சாப்பிட்டுவிட்டு என்னிடம் மறுபடியும் கம்பிளைண்டு !
என் அப்பா  வேறு என்னிடம் உன் பசங்களுக்கு சாம்பார் அருமையே புரியவேயில்லை .சாம்பார் வாசனையை அந்த கடுகு வாசனை தூக்கி அடிக்குது என்று சொல்லி அந்த சாம்பாருக்கு ஒரு பாரத ரத்னா அவார்டு குடுக்காத குறை !
வெள்ளிக்கிழமை சாயந்திரம் எங்க அப்பாவின் கொடுமை தாங்காமல் என் பசங்கள் ஏதோ செய்து சாப்பிடாமல் தப்பித்து ஒடி விட்டார்கள் .
வெள்ளிக்கிழமை இரவே என்னிடம் சனிக்கிழமை சாயந்திர டிபனுக்கான காசை வாங்கிகொண்டு விட்டார்கள் .
வெள்ளிக்கிழமை  இரவு எங்க அப்பா அவளிடம் ஏதோ பூமத்தியரேகை அட்சரேகை  என்றெல்லாம் சொல்லஇங்கிலீஷ் மீடியத்தில்படிப்பதால்  அது சரிவர புரியாமல்  என் சின்ன மகன்  என்ன சொல்கிறீர்கள்  என்று கேட்டிருக்கிறான் .
என் அப்பாவும் இது ஜாக்ரக்பி ஃ  டா   என்று சொல்லியிருக்கிறார் .
என் பையன் அவளுக்கு ஏன் தாத்தா  ஜாக்ரக்பிஃ  சொல்லித்தருகிறார் போய்
கேளு  கேளு என்று நச்சரித்தான் .
போய்  கேட்டேன்.
பூகோளரீதியாக  ஒரு தாவரத்தின்  /தானியத்தின் தன்மை பூமத்தியரேகை
அட்சரேகை  கடல் மட்டத்திலிருந்து உயரம் ,கடலிலிருந்து உள்ள தூரம்
இவற்றை பொறுத்து மாறும் ,அதனால் தான் சென்னையின் கடுகு சரிவரப் பொரியவில்லை என்ற உலக மஹா கண்டுபிடிப்பை  விளக்கமாக விவரித்துகொண்டிருந்தார்.
எனக்கோ எரிச்சல் ! ஆமா  இப்போ அவ 12வது பரிட்சையா எழுதுகிறாள் .
வெட்டி வேலை ! என்று மனதில் நினைத்தேனே தவிர வாயைத்திறக்கவில்லை.
 ஒரு வழியாக ஞாயிற்றுக்கிழமை  காலையில் பசங்களை எழுந்து படிக்க சொல்லிவிட்டு நான் சமைத்தேன் .
அந்த வீடு மிகவும் சிறியது , நானும்அப்பா வேலைக்காரி மகன்களுடன்  பேசிக்கொண்டே சமைக்கும்பொழுது கடுகு தாளித்தேன். பட பட என சத்தம் கேட்டதும்  என்னங்க  உங்களுக்கு மட்டும் எப்படி  இப்படி பட பட ன்னு
பொரியுது என்று வாயைப்  பிளக்க  எங்கே கடுகை காமிங்க  என்று கேட்டாள்.
கடுகு டப்பாவை காண்பித்தேன் .இந்த டப்பாவா கடுகு டப்பா , நான் அந்த டப்பாவில்  இருந்த கடுகுல்லெ பொறித்தேன்  என்று (Leaf tea)
   டீ இலைகள் இருந்த டப்பவைக்காட்ட  பையன்கள் பயங்கரமாக  வாரினார்கள் .
தாத்தா எப்படி எப்படி கடுகு வாசனை சாம்பார் வாசனையை தூக்கி  அடிக்குதா ?என்று எங்க  அப்பாவை வேறு  கிண்டல் !
எல்லாம் அவளுக்கு வெள்ளெழுத்து  வந்துவிட்டதால்  வந்த வினை !


Sunday, 15 September 2013

வாஸ்து மளிகை

வாஸ்து  என்ற ஒன்று மனிதர்களை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது  என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை .
என் நோக்கமும் அதுவல்ல .
சரி வாஸ்து பார்ப்பது சரியா தப்பா என்று ஆராய்வதா வாக்குவாதமா  என்று கேட்டால் அது வும்  இல்லை . அது முழுக்க முழுக்க நீயா நானா கோபிநாத்தின்   ஏரியா  . நான் நுழையத் தயாரில்லை .
 பார்க்காமலேயே கோப்பெரும்  சோழனும் பிசியராந்தையரும்
நட்பு கொண்ட மாதிரி நானும் கோபியும் ஒருவரை ஒருவர்  பார்க்காமலேயே  உர்  உர்  ஆகவேண்டாம் என்று தீர்மானித்துவிட்டேன்  ,
 பிறகு என்னதான் நோக்கம் என்றால்  மேலே படியுங்கள் புரியும்.
 ஒரு இரண்டு வருடம் முன்பு  என் மகன் ஹைதராபாத்தில் பணி புரிந்த போது  நான் போய்  ஒரு 20 நாள் தங்கியிருந்தேன் . நான் முன்பே அங்கு 7 வருடங்கள் பணி புரிந்த காரணத்தால்  என்னால் தனியாக எங்கும் ஊர் சுற்றும் தெகிரியம்  உண்டு. மொழி பிரசினை கிடையாது.
என்னிடம் இருந்த சின்ன பர்ஸ் கிழிந்து விட்டதாலும் வேறு சில சாமான்கள் வாங்க வேண்டியும் நான் கோடி என்ற இடத்துக்கு போனேன் . அங்கே ஒரு 12 வயது மதிக்க்கூடிய  ஓர் பையன் வாஸ்து  பர்ஸ்  வாஸ்து பர்ஸ் என்று கூவிக்கொண்டு  சூரியா  ஒரு படத்தில் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி உபயோகித்தது என்று சொல்வாரே அந்த ரேஞ்சில் இந்த பர்ஸ்  நமது ராமர்
 என் டி ஆர் , மற்றும்  ஏ  . நாகேஸ்வர ராவெல்லாம் இந்த பர்ஸ்  வாங்கியதன் பின் தான் பிரபலம் ஆனார்கள். இந்த பர்ஸ்சை இவர்கள் குடும்பம் மட்டுமே ஒரு சிலருக்கு மட்டுமே செய்து கொடுத்த தாகவும் ,இப்பொழுது  மாநிலமும் மன்பதையும் பயனுறும் வகையில் இப்பொழுது நிறைய செய்து அதுவும் ஏழைகள் கூட வாங்க வகை செய்யும் விதமாக  மிகவும் சல்லிசாகவும் விற்பதாகக் கூறினான்
பிறகு ஒரு  50 வயது மதிக்கத்தக்க  ஒரு ஆள் வந்து  தெனாலி யிலிருந்து . வருவதாகவும்  போன முறை  ஹைதராபாத் வந்த போது  பர்ஸ் இவனிடம் வாங்கியதிலிருந்து  பணத்திற்கு தட்டுப்பாடே இல்லை என்று சொல்லி ஒரு 10 பர்ஸ் வாங்கினான் . அதைப்  பார்த்து  ஒரு நாலு பேர் பர்ஸ் வாங்க அவன் பேச்சு சாதுரியத்தை கேட்டவே  கும்பல் கூடியது..
 இது  ஒரு அக்மார்க் பொய் என்று தெரிந்தும் நான் என் தேவை கருதியும் 20 ரூபாய் பர்ஸுக்கு  எட்டு கொட்டேஷன் வாங்குவார்களா,இதுக்கொசரம் கோடி  ஏரியா வுக்கே பாதயாத்திரை  போகணுமா என்ற  (சோம்பேறித்தனமா   ?) என்ற அறிவும் உணர்த்த நானும் ஒரு பர்ஸ் வாங்கினேன்.
 பிறகு வேறு இடங்கள் சுற்றி  செகந்திராபாத் பஸ்  ஸ்டாண்ட் வந்தேன் .
ஒரு டீக்கடையில் இருந்த ஆளை ஒருத்தன் சத்தமாக சீக்கிரம் வா மாமா என்றான். யாரென்று பார்த்தால் நம்ப 12 வயது வியாபாரியும்  தெனாலி யிலிருந்து .  வந்ததாக சொல்லப்பட்ட ஆளும்  !
 பிறகு  கோடி"யில் செய்த மாதிரியே!
 சே! என்ன செட்டப்புடா!
 என்று நினைத்தாலும் எனக்கு அது  ஒன்றும் தப்பாக தெரியவில்லை.
 ஏனென்றால் " என் மேனி அழகின் ரகசியம் ..... என்று பெரிய பெரிய தயாரிப்புகளுக்கு  பிரபல அழகிகள்  விளம்பரம் தந்த போது யாருமே அது உண்மையா  என உரசிப்பார்த்தோமா என்ன,  அப்புறம் இதை மட்டும் ஏன் ?
அவன் ரேஞ்சிற்கு இதுதான் முடியும். . ஓகே  !
 ஆனாலும் வீட்டுக்கு வந்தும் கூட அவனின் வியாபார உத்தி  எனக்குப் பிடித்திருந்தது.
பிறகு நான் என் வீட்டு  வேலை ஆபிஸ் வேலை களில்  பிசியாக இருந்த காரணத்தால் அவனுடைய உத்தியை பின்பற்ற முடியவில்லை.
சரி இப்போ டயம் இருப்பதால் நானும் அவன் போல் செய்யலாம் என்று ரூம் போடாமல் யோசித்து ஒரு  பிசினஸ் செய்யப் போகிறேன் . இதில் நீங்களும் பங்கேற்கலாம்.
 சரி என்ன பிசினஸ்  என்றால் வாஸ்து அரிசி வாஸ்து துவரம்பருப்பு போன்ற அனைத்து சூப்பர் மார்கெட் சமாசாரங்களும்  !
உதாரணமாக எங்களது வாஸ்து நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வாஸ்து பிரகாரம் ஆரம்ப கால கட்டங்களில்  வானத்தை பார்த்து தான் வளர வைப்போம்.
பிறகு அறுவடைக்கு முன் வாஸ்து ரூல்ஸ் படி  நாம் வாழும் பூமியை நோக்கி வளர்ப்போம். ( இது எப்படி?)
இது எங்கள் குடும்பம் மட்டுமே செய்து வந்தது. இதற்கு  ஒரு அறு நூறு வருட சரித்திரம் உள்ளது. இதை யார் வேண்டுமானாலும்  பழைய ஏடுகளில் பார்க்கலாம். ஆனால் ஒன்று அந்த ஏடுகள் பிராப்தம் உள்ளவர்களுக்கு  மட்டுமே கிடைக்கும். ( இது சூப்பரா இருக்கில்ல )
 இதற்காக தமிழகமெங்கும் .... (. ஏமாத்தறதுன்னு  பிளான்  போட்டாச்சு, அப்புறம் எதுக்காக தமிழ் நாடு மட்டும் ) என  இல்லாது உலகம் முழுவதும் மற்றும் செவ்வாய்  புதன் கிரகங்களில் உள்ளவர்களிடம் இருந்தும் ஏஜென்சி மற்றும் முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
 ( ஒரு ஆயிரம் இனா  வானாவாவது   அப்ளை பண்ணாது?)
 முகவர் கட்டணம்  ரூபாய் 10000.
 பார்த்து காமெண்டு போடும் பதிவர்களுக்கு 50% சலுகை உண்டு.
இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே!
 ( அப்புறம் நாங்களே ஓடிடுவோமில்லே )
 எனவே உங்கள் ஏஜென்சிக்கு முந்துங்கள்.
 அணுக வேண்டிய முகவரி
  வாஸ்து மளிகை
 எண்  420, ஃ பிராடு தெரு.
ஜேப்படி அவின்யு ,
டுபாக்கூர் நகர்,
 

Wednesday, 11 September 2013

தன்னம்பிக்கை என்றால் இதுவல்லவோ தன்னம்பிக்கை !



  நான் ஒரு கம்பெனிக்கு மொழிபெயர்ப்பாளராக போன வருடம் சென்றிருந்தேன் . அந்த  கம்பெனியில் இருந்த ஒரு சிறிய புல்லின் புகைப்படம் இது.
PA250101.JPG  மிகச்சிறிய  புல் அது. . அதன் மீது யாரோ ஒரு ஸ்பாஞ்சை தூக்கிப் போட்டுவிட்டார்கள் ..அந்த புல்லை விட நிச்சயம் 100 மடங்கு க்கு மேலே எடை கொண்ட ஸ்பான்ஜ் அது. ஆனாலும் கொஞ்சம் கூட அசராமல்  அந்த புல் அந்த ஸ்பான்ஜ் உள்ளே புகுந்து எப்படியோ மேலே வளர்ந்து விட்டது..அந்த புல்லின் உயரம் 15
 செ .மீ க்கும் குறைவு என்பதாலும் எனக்கும் போட்டோ திறமைகள் பத்தாது என்பதாலும் என்னால் முடிந்தவரை எடுத்த போட்டோ !
 தன் மீது  அவ்வளவு  பெரிய பாரத்தைப் போட்டவுடன் அந்த புல்
 எந்த வாஸ்து  நிபுணரிடம் போகமுடியும் ?
எந்த ஜோசியக்காரரிடம்  போகமுடியும் ?
எந்த மதக்கடவுளை எப்படித் தேடிப் போகமுடியும் ?
அதற்கு யார் ஊக்கம் கொடுத்தார்கள்?
எந்த அரசு இலவசமோ ,நிதி உதவியோ  (subsidy கொடுத்தது?
கூட அதற்கு பார்ட்னர் யாரும் உண்டோ ?
யாரிடம் போய் தன்  கவலையை சொல்லமுடியும்?
யோசித்துப்பாருங்கள்

ஒரு அறிவுள்ள ஒரு புல் தன்னை ஆம்  தன்னை மட்டுமே நம்பியது.
ஸ்பான்ஞ்சின் அடிவாரத்திலிருந்து ஒரு புல்லால்  உள்ளே புகுந்து வளருவது என்பது ரொம்பவே கஷ்டம்..
எப்பொழுதெல்லாம்  மனச்சோர்வு அடைகிறேனோ அப்பொழுதெல்லாம் இந்த போட்டோவைக் கண் முன்னே நிறுத்தி என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வேன் .


Monday, 9 September 2013

பதிவர் சந்திப்பு 2013

பதிவர் சந்திப்பு 2013 பற்றி எல்லோரும் எழுதி ஓய்ந்த பின் இவ்வளவு சுறுசுறுப்பாக ஏன்  எழுதுகிறேன் என்று பலரும் நினைக்கலாம் .நான் எழுதும் பதிவுகள் யாராலும் படிக்கப்படுகிறதா என்றே  தெரியாத நிலையில்  ( என் பதிவிற்கு பின்னூட்டங்கள்  எதுவுமே  இல்லாமல் இருந்தது )எனக்கு ஒரு மெயில் .ஸ்கூல் பையன் அவர்களின் பின்னூட்டம் .
ஸ்கூல் பையன் அவர்களுக்கு  என் நன்றி.
நான் கேட்காமலே எனக்கு எப்படி செய்வது  என்பதை விளக்கினார் .
பிறகுதான் என் பதிவிற்கும் பின்னூட்டங்கள் இருந்தததைப் பார்த்தேன்
ஆஹா நாம் எழுதுவதை படிக்கவும் தமிழ் கூறும்  நல்லுலகில் நாலு பேர் இருக்கிறார்கள் என்றதும்  நடிகை ரேகா  ஒரு இந்திப் படத்தில் என் கால் தரையிலேயே இல்லை  என்று பாடுவதுபோல் ஒரு டான்சு  ஆடிவிட்டுத்தான் இந்த பதிவை எழுதுகிறேன் .
 எனது உடல் நிலை 3 மாதங்களாக  சரியில்லாத காரணத்திலால் என்னால் வேலைக்குப் போகவில்லை .மன அழுத்ததிலிருந்து விடுபட ஏதாவது செய்ய நினைத்த போது ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமா என நினைத்தேன் .அதில் தமிழ்வாசி பிரகாஷின் பிளாக் உதவியாக இருந்தது .திண்டுக்கக் தனபாலன் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார் .அந்த சமயம் தான் பதிவர் திருவிழா நிகழ்ச்சி பற்றி பார்த்தேன் , திருமதி சசிகலா அவர்களை தொடர்பு கொண்டு  பதிவர் திருவிழா வந்தேன்.
புது மனிதர்களாக இருந்ததால் நான்தான்  நிறைய பேரிடம் பேசவில்லை .

ஆனால் நிகழ்ச்சி என்னைப்பொருத்த வரை திருப்தியாக இருந்தது .
நிறைய புது மனிதர்களை சந்தித்தேன்.
நிறைய புது விஷயங்களை கற்றுக்கொண்டேன் .
இதுவரை பார்க்காத ஒரு புது உலகத்தில் நுழைந்த ஒரு உணர்வு..
உணவு ரொம்பவே சூப்பர்,
ஒவ்வொருவருக்குள்ளும்  இருந்த தனித்  திறமைகள் என்னை ஆச்சரியப்பட வைத்தது,
மிக மிக   நாகரிகமான முறையில் நடந்தது.
விசில் சத்தம் இல்லை என்றால் கலகலப்பு இருந்திருக்காது .
மதியம் வெக்கை அதிகமானதாலும்  தூக்கம் வந்துவிட்டதாலும் மூன்று  மணிக்கு கிளம்பிவிட்டேன் .
மிக மிக திருப்திகரமான ஒரு நிகழ்ச்சி .

Sunday, 8 September 2013

பூனையின் மண்ணாசை

 மனிதன் மட்டுமே மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை கொண்டவன் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று  என்  எண்ணத்தையே புரட்டி போட்டுவிட்டது.பூனைக்கும் கூட நம்மளை மாதிரியே சொல்லப்போனால்  நம்மளை விடக்கூட அதிகமான மண்ணாசை இருக்கு.
எங்க வீடு ஒரு அபார்ட்மெண்ட் . எங்க வீட்டுக்குப்பின்னால் ஒரு நடிகை குடியிருக்கிறார் .  அவர்தான்  பூனை வளர்க்கிறார். ஆனாலும்  அந்த  பூனை முக்கால் வாசி நேரம் எங்க  அபார்ட்மெண்ட்டில்தான்   வாடகை இன்றி  குடியிருப்பு..
நடிகையின்   பூனை என்பதாலோ என்னவோ  அபார்ட்மெண்ட் வேலையாட்கள் முதல் கீழே சூப்பர் மார்கெட்டில் உள்ளவர்கள் வரை எல்லோருக்கும் செல்லம்.
ஆனால் எனக்கும் அதற்கும் ஏழாம் பொருத்தம் ..சும்மா போய்க்கொண்டு இருக்கும் என்னை பார்த்து சிநேக பாவமாக 'மியாவ்" சொல்வதில்லை.
 நானும் கொஞ்சம் கடிசாகத்தன்  பார்ப்பேன்.
  தொடர்ந்து ஒரு பத்து  நாட்களாக எங்க வீட்டு பால்கனியில்  உள்ள"  ஸ்லாப் " பில் வந்து குடிபுகுந்து  ராத்திரி பகல் என்று பார்க்காமல்  ஒரே காட்டுக்கத்தல் .
தூககம் வேறு கெட்டுப்போனது.
 விரட்டினாலும் போவதில்லை .ஒரு நாள் அது எங்கேயோ போயிருந்த போது 
 காலியாக இருந்த இடத்தில் வேறு சில சாமானை வைத்துவிட்டேன்..
கொஞ்ச நாழி கழித்து திரும்பி  வந்த பூனை  என்னமோ  அதும் பேர்ல பட்டா போட்ட  இடத்தை  நான் ஆக்கிரமிப்பு செய்து விட்ட மாதிரி என்னை வாழ் நாளிலேயே யாரும் முறைக்காத ஒரு முறைப்பு  லுக் !பூனை பாஷையிலேயே ஒரு அரை மணி சாவகாசம்  என்ன என்னவோ திட்டியது. பத்தாதற்கு என் மகன்  வேறு  பூனை மொழியில் டிகிரி வாங்கிக்கிழித்த மாதிரி  உன்னைக் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி  திட்டுது  என்று பூனையின் மியாவுக்கு  கோனார் நோட்ஸ் போட்டான் ,
அதற்கு பிறகு  இன்னமும் எங்கள் இருவருக்கும்  இடையே  கார்கில் பார்டரில் உள்ள நிலையே தொடருகிறது.