Friday 6 December 2013

டெல்லி அனுபவம் -2

முதுகு வலி காரணமாக  நெட் பக்கம்,பதிவு பக்கம் எல்லாவற்றுக்கும்  கொஞ்சம் வாலண்டரி ஒய்வு .
 சும்மா நம்மளும் கீரோம்ன்னு  (இருக்கோம் ) காமிக்கறதுக்காக  ஒரு  சொதப்பல் பதிவு  போட்டேன்.
சரி , விஷயத்துக்கு வருவோம் .
நான்  டெல்லி போன  புதிதில்  அடிக்கடி  எங்க  அம்மா  மொழி  தெரியாததால் மளிகைக் கடையில்
ஏதெதோ  கலாட்டா  செய்து விட்டு வருவார்கள் .
அவையெல்லாம் சும்மா ஜுஜ்ஜுபி !
மெயின் அயிட்டம் ஒன்னு சூப்பர்!
டெல்லி   போய் ஒரு மூணு நாள் தான் ஆகியிருக்கும்.
வீட்டுக்குப் பக்கத்தில் ஷாப்பிங் காம்பிலெக்ஸ் !
ஒரு  2 நிமிட நடைதான் .
எங்க அம்மாவை அப்பப்போ தெகிரியமா இருக்கணும் .
மொழி தெரியலேன்னு பயம் கூடாது .
கொலம்பஸ் என்ன மொழி தெரிஞ்சா , வழி தெரிஞ்சா  அமெரிக்காவை கண்டு பிடிச்சார் !
கடைக்கெல்லாம்  போங்க ! என்றெல்லாம் உசுப்பிவுட்டிருந்தேன் .
எங்க அம்மாவுக்கு மனப்பாடம் பண்ண பிடிக்கும்
அதோடு  நல்லாவும் மனனம் செய்ய வரும்
எனவே என்ன விலை எங்கே போன்ற முக்கிய வார்த்தைகள் மற்றும் நம்பரெல்லாம்  12வது  படிக்கிற பையன் ரேஞ்சுக்கு  பொட்டை  நெட்டுரு  !

எங்க  அம்மாவுக்கு  தன்  பொண்ணு  என்கரேஜ்  பண்ணுவது பற்றி  ஏகப்  பெருமை !
வீட்டு அட்ரஸ் மட்டும்  ஹிந்தியிலும்  இங்கிலீஷிலும்  எழுதிக் கொடுத்திருந்தேன்
நான்  ஆபீஸ்  போனதும் மளிகைக் கடை விசிட் !
 மளிகை சாமான்  ஒவ்வொண்ணா    கையை  வெச்சு காமிச்சு வெலை  வெவரம் எல்லாம்  கடைக்காரன் கிட்டே கேட்டு ஒரு  நோட்டிலே எழுதிகிட்டு  எது எல்லாம்  தஞ்சாவூர்  விலையோட ஒத்துப்  போச்சோ அது எல்லாம்  வாங்கிகிட்டு  பிறகு கடைசியா  கோதுமை மாவு விலை விசாரிச்சப்போ
அங்கே ஒரு தகராறு!
எங்க அம்மாவுக்கு  ஹிந்தி பச்சாஸ்  (50)க்கும்  பச்சிஸ்  (25))க்கும் ஒரு
கன் பியுஷன்   அப்படின்னாக்க  கடைக்காரனுக்கு   இங்கிலீஷ்  15  மற்றும் 50 க்கும் ஒரு கன் பியுஷன்  .
எங்க அம்மா எடையைப் பத்தி 15  கிலோ   ன்னு சொல்ல அவன் விலை பத்தி பேச ரெண்டு பேருக்கும்  இடையிலான மொழிப் பிரச்னையாலே  கோதுமை மாவு விற்பனை  டீலிங்  படியலே!
எங்க அம்மாவுக்கு அவன் ஏமாத்துறான்னு நெனப்பு !
இல்லப்பா  “எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரிஎன் பொண்ணு .
அதைக் கூட்டிகிட்டு சாயந்திரமா வரேன்னு சொல்லிட்டு
மத்தியானம் கூட்டம் இல்லாததாலே வேறே என்னனமோ   எங்கம்மா இங்கிலீஷில் பேச அவன் ஹிந்தியில் பேச , ஏதோ  பேசி விட்டு 
வீட்டுக்கு வந்திட்டாங்களாம் .

சாயந்திரம்  நான் வந்ததும்  ரொம்ப பெருமை  பொங்க  விவரமெல்லாம் சொல்லிட்டு கோதுமை ஒண்ணுதான்  என்னை  ஏமாத்தப்பாத்தான்,
 நான் ஏமாறுகிற ஆளா என்ன?
 நீ வந்தப்புறம் வாங்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் .
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா நாம போகலாம்ன்னு சொன்னங்க .

பிறகு ஒரு ஏழரை மணிக்கு ரெண்டு பேரும் போனோம் .

கடையில் சகோதரர்களுக்குள் எதோ சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்க , மத்தியானம் எங்க  அம்மாகிட்டே பேசிகிட்டு இருந்த ஆள்  கடையின் வெளிப்பக்கம்   (அவனும்  அந்தக்க்கடையின் சகோதரர்களுள்  ஒருவன் ) இருந்தான் . என்னைப்  பார்த்ததும் நான்   ஹிந்தியில் நல்லா  பேசறதைப்  பாத்து சந்தோஷப்பட்டு  தான் .பி இலிருந்து  வந்த கதையை ச் சொன்னான் .
பிறகு  எங்க அம்மா  வந்தது  பற்றி  எல்லாம் சொல்லிவிட்டு  தனக்கு  இங்கிலீஷ் சுத்தம் என்று  வருத்தபடாத வாலிபனாக  சிரித்துக்கொண்டே சொன்னான் .
கடைசியாக  கோதுமை மாவு  மூட்டை கள் 5 கிலோ , 10 கிலோ , 15 கிலோ என்று அடுக்கி வைத்திருந்தார்கள் .
விலை என்ன என்று கேட்டோம் .
என்ன நினைத்தானோ தெரியவில்லை ஏதோ பேச்சு வாக்கிலே  15 கிலொ மூட்டை ரூ  15, என்றான் .
இவன் வெளியே இருந்து பந்திரா  (15)ன்னு  ஹிந்தியில்  கத்த
சரி  என்று  நாங்களும் 15 ரூபாயை  கடை உள்ளே  கொடுத்துவிட்டு 
தூக்க  முடியாமால் தூக்கினோம் .
கடை உள்ள  இருந்தவன்  நாங்க   எந்த மூட்டையைத்  தூக்குகிறோம்ன்னு கவனிக்கலை.
அவனுகளுக்குள்ளே வேறே எதோ கார சாரமான பேச்சு.
15 கிலோவை ரெண்டு பேராலேயும் தூக்க  கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது.
யாராவது பாத்தா என்ன நினைப்பாங்கோ
என்ன நெனச்சா என்ன
 இங்கே என்ன சொந்தமா பந்தமா ன்னு சொல்லிக்கிட்டு  இருபது தப்படி தானே வீட்டுக்கு எடுத்திட்டு வந்திட்டோம்..
எங்க அம்மாமத்தியானம் என்னை 50 ரூபாய் ன்னு சொல்லி ஏமாத்தப் பாத்தான் . வெவரம் தெரிஞ்ச நீ வந்தப்புறம் பாரேன் .”ன்னு எனக்கு ஒரே புகழ் மாலை.
என் ஹிந்தி புலமை (?) பற்றி ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள்
அடுத்த   நாள் பாங்கில் போய் வேலை செய்யணுமின்னு எங்க அம்மா எனக்கு கையில்   வருமுன்  காக்கும்  விதமாக  அமிர்தாஞ்சனம் எல்லாம்   காப்பு  இட்டு (தடவிவிட்டு )ரொம்பவே சவரட்சணை !
15 ரூபாய் க்கு 15 கிலோ கோதுமை மாவுன்னாக்க  ரொம்பவே சீப்பு .
நம்மூரிலே அரவைகூலி  மட்டுமே 15 ரூபாய் ஆகும்ன்னு ஒரே  சந்தோஷம்
எங்க அம்மாவுக்கு.
எங்க அம்மா அப்பா இருவரின் ஊர் திருவையாறு  பக்கம் .
எப்ப பாத்தாலும் ஊர் பெருமையைப் பத்தி யும் காவிரி ஆற்றுப் பாசனத்தில்  மூணு  போகம் வெளையற பெருமை  பத்தியும்   மூச்சு கூட விடாமல் பேசுற எங்க அம்மா கம்பிலீட்டா பிளேட்டை திருப்பிப் போட்டு அன்னைக்கு ராத்திரி மற்றும் பின் வந்த பல நாட்களிலும் டெல்லி மாதி வேறே ஊர் வரவே வராது, ,ன்னு டெல்லியின் பெருமைதான்.
15 ரூபாய் கோதுமை மாவு பிறந்து வளர்ந்த மண்ணையே மறக்கச் செய்த  கொடுமை !
கோதுமை  மாவு  வாங்கிட்டு வந்த  நாளிலேருந்து   தினமும்  சப்பாத்திதான் .
எங்க அம்மா டயாபடீஸ்  நோயாளி என்பதால் கோதுமை மாவிலேயே என்னென்னவோ விதவிதமாக செய்து சாப்பிட்டார்கள் .
பத்தாததுக்கு  பால் வேறே சீப்பு !
கறிகாய் எல்லாம் 1982ல் ஒரு கிலோ முக்கால் ரூபாய் ,
இல்லாட்டி ஒண்ணேகால் கிலோ ஒரு ரூபாய் .
 பாலும்  கோதுமை மாவும் நவம்பர் மாதக்குளிரும் இயற்கையிலேயே நல்ல சிகப்பான எங்க அம்மா க்கு    உடல்  இன்னும் சிகப்பாக ஆகி  கன்னம் எல்லாம் ரோஸாக ஆனதும் சந்தோஷம்  தாங்கலெ எங்கம்மாக்கு !
முடிஞ்சா இங்கியே  வீடு வாங்கி செட்டில் ஆயிடலாம் .
டெல்லி யிலேயே எனக்கு மாப்பிளை கிடைக்காதா  ங்கிற ஆசை கூட எங்கம்மாக்கு வந்திடுச்சு!
நாரணா நின்னை நினைக்காத நாளே இல்லை என்பது போல்  கோதுமை மாவு பற்றி அம்மா பேசாத நாளே இல்லை எனலாம் .
கோதுமை மாவு தீந்ததும் அடுத்த பதினஞ்சு கிலோ வாங்க கடைக்குப் போனா அவன் என்னடான்னக்க 50 ரூபாய் கொடுங்க என்கிறான் .
இல்லப்பா போன மாசம்தான்  15 ரூபாக்கு வாங்கினோம்ன்னு  சொன்னோம்.
 இளக்காரமா   சிரிச்சுகிட்டே “யாரும்மா சொன்னா ?”
15 ரூபாக்கு 15 கிலொ கோதுமை மாவு எந்த கேனயன் தருவான்னு கேட்டான் .
முண்டம்  நீதான்  கொடுத்தேன்னு  அவன்கிட்டேசொன்னா   பழைய   பாக்கிய  கேட்டுறப்  போரான்னுட்டு  வாய மூடிட்டு  5 கிலோ மூட்டையை தூக்கிட்டு  சோகமா வீடு வந்து சேந்தோம்.


7 comments:

  1. //என்றெல்லாம் உசுப்பிவுட்டிருந்தேன் .///
    சும்மா இருக்குறவங்கள உசுப்பிவிடுவதில் பெரிய ஆளா இருப்பிங்க போல இருக்கே. உங்களை மாதிரி உள்ள ஆட்களை பிரான்ஸுக்கு தனியா அனுப்பி வைக்கணும்...

    ReplyDelete
  2. /எங்க அம்மாவுக்கு தன் பொண்ணு என்கரேஜ் பண்ணுவது பற்றி ஏகப் பெருமை !///
    உங்க அம்மா மிக அப்பாவி ஏமாளி அம்மாவா இருப்பாங்களே போலிருக்குதே

    ReplyDelete
  3. //நான் ஹிந்தியில் நல்லா/
    தமிழின துரோகியா நீங்க

    ReplyDelete

  4. ///சந்தோஷம் தாங்கலெ எங்கம்மாக்கு !
    முடிஞ்சா இங்கியே வீடு வாங்கி செட்டில் ஆயிடலாம் .
    டெல்லி யிலேயே எனக்கு மாப்பிளை கிடைக்காதா ங்கிற ஆசை கூட எங்கம்மாக்கு வந்திடுச்சு! ///

    கொஞ்சம்வேகமாக படித்த போது மாப்பிளை கிடைக்காதா ங்கிற ஆசை கூட எங்கம்மாக்கு வந்திடுச்சு! என்று படித்து விட்டேன்

    ReplyDelete
  5. கோதுமை மாவுல இவ்ளோ காமெடியா?

    ReplyDelete
  6. அருமை
    கோதுமையிலேயே
    இவ்வளவா

    ReplyDelete
  7. indha maadhiri engalukkum anubavam irukku....:)))

    ReplyDelete