Friday 22 December 2017

அமெரிக்காவில் செய்த புளியோதரையால் இந்தியாவில் கடும் பூகம்பம்


 தலைப்பு ஏதோ வெகுஜன நாளிதழ்களில் வரும் தலைப்பு  போல் இருக்கிறதா?

ஆனால் உண்மை .

நான் எப்போதுமே சொல்வேன் ,

மாமியார் மருமகள் ,கணவன் மனைவி சண்டையை ஆரம்பமாகும்  லொகேஷன்களில் மிகுந்த முக்கியத்துவம் வகிப்பது சமையலறை .

நிஜமாகவே நடந்த இந்தக் கதையைக் கேட்டால் இது 1௦௦/1௦௦ உண்மை என்று ஒத்துக்கொள்வீர்கள் .

என் நெருங்கிய தோழி ஒருவரின் தங்கை அமெரிக்க மாப்பிள்ளையைக் கலியாணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார் .

முதல் நாள் செய்த சாதம் மிஞ்சி விடவே அதை வீணாக்க மனமில்லாமல் புளியோதரை   ஆகஉருமாற்றிக்  கணவருக்குப் பரிமாறி இருக்கிறார் .


அன்று சுக்கிரன் புதன் குரு போன்ற கிரகங்கள் எங்கோ  வேறு வேலையாய்ப்  போய் விட சனி பயங்கர உக்கிரப் பார்வை பார்த்திருக்கணும் போல .

கணவருக்கும் புளியோதரைக்கும் என்ன வாய்க்கால் தகராறோ ....அது இந்த மனைவிக்குத் தெரியவில்லை .


கணவன்  இதை வைத்து அமெரிக்காவில் ஒரு குரு க்ஷேத்ரம்  செட் போட்டுவிட்டார்.

பொதுவாகப் பெண்களும் சரி ஆண்களும் சரி கல்யாணம் வரை அம்மா பேச்சைக் கேட்கமாட்டார்கள்
.ஆனால் கல்யாணம் ஆனா உடனே  ஒரு" குபீர் " பாசம் வரும் பாருங்கள் . இது என்ன மாதிரியான டிசைனோ என்று எண்ணத்தோன்றும்.

 ஒரு இருபது வருடத்திற்கும் மேலாக அம்மாவுடன் இருந்திருந்தாலும் அம்மாவுக்கு உதவியாக அடுப்பங்கரை பக்கம் எட்டிக் கூடப்  பாக்காத இவர்கள் ,கல்யாணம்  ஆனபின்னே   "எங்க  அம்மா  எங்க  அம்மா "
என்கிற அலப்பறை ஓவராக இருக்கும்.

இதே போல்  இந்தப் பெண்ணும் எங்க வீட்டிலே இப்படித்தான் என்று பாட

இந்தப் பையனோ  எங்க வீட்டிலே எல்லாம் பழசெல்லாம் சாப்பிடவே மாட்டோம் என்று சொல்ல .....


 இது இத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை  பன்னாட்டுத்  தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி ...  இருவருமே     இதை இந்தியாவில்இருக்கும்   தத்தம் தாய்மார்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள் . (ஏனோ இந்த மேட்டர்களின் first information  ரிப்போர்ட் கள் தந்தை மார்களுக்குப் போவதில்லை ,)

பிறகென்ன இரு பெண் சம்பந்திமார்களும்  இந்த விஷயம் பற்றிக் கொதித்துக்  கொந்தளித்து   எழ .....

கிட்டத்தட்ட ஒரு பெரிய பூகம்பமே .......

ஒரு புளியோதரையால்    வாக்கு வாதங்கள்  ......பல மணி நேரங்கள்.

 ஹி    ஹி ஜியோவுக்கு நன்றி!

கடைசியில்  பெண் வீட்டில் இது வேறு   ஒன்றுமில்லை       சனிப் பெயர்ச்சியின் எபெ ஃ க்ட்  என்று  சொல்லி எண்டு கார்டு போட்டு
முடித்திருக்கிறார்கள் மேட்டரை.


அடுத்த பரபரப்பு வரை  இந்த மேட்டர் உறவினர்கள்  மற்றும்  அவலுக்கு ஏங்கும்  வெறும்  வாய்களால்  அலசப்படும் என்பதில் ஐயமில்லை .

இன்னும் புது லேப்டாப் பழக்கவரவில்லை  . ஸ்டார்ட் செய்வதிலும் கொஞ்சம் சந்தேகங்கள் உள்ளன
எனவே காமெண்ட் போடவில்லை .

Monday 11 December 2017

கடவுளாகி விட்டஅதிர்ஷ்டப் பூனை



மனேகி நெக்கோ என்பது ஜப்பானிய அதிர்ஷ்டத்தை
வரவழைக்கும் பூனை பொம்மை ஆகும்

என்னிடம்  எனது மாணவர்கள் அளித்த  இரண்டு பொம்மைகள் உள்ளன.

ஒரு நாள் கடையில் இந்தப் பூனை விற்பனைக்கு இருப்பதைப் பார்த்த நான் ஒரு இரன்டு பொம்மைகள் வாங்கி வந்தேன் .

ஒன்றை  என் மகன் போலவே நினைத்துக் கொண்டிருக்கும்
என் மகனின் ஃ பிரண்டுக்குக்  கொடுத்தேன் .



அவனும் அதை  வாங்கிக் கொண்டுபோய் ஆபீசில் வைக்க அங்கே இருந்த ஒரு பஞ்சாபிப் பெண்மணி அந்தப் பூனை மேல் பக்தி ஆகி அதற்குப் பூ  ஊதுவத்தி முதலியவை ஏற்றிவைக்கப் பட்டு தினமும் பலராலும்(சின்ன ஆபீஸென்றாலும் ) வழிபடப் பட்டு வந்ததாம்.


 திடீரென ஒரு நாள் அந்தப் பஞ்சாபிப் பெண்மணிக்கு ஜுரம் வந்து டாக்டரிடம் போனால் அவர் அந்த ஜுரத்திற்கு "டெங்கு "என்று பெயரிட்டு நிலவேம்புக் கஷாயம் கொடுத்தது  மற்ற சிகிச்சையும் அளித்திருக்கிறார்.


உடனே அந்தப் பெண்மணி  மெர்சலாகி இந்த "டெங்கு "விற்கு பூனைதான் முழுக்கக்   காரணம் என்று நினைத்து நொந்து விட்டாளாம்.

பூனை கூட டூ  விடவேண்டியது என்றே தீர்மானித்து விட்டாளாம்.

 ஒரு வாரம் ஆபீஸ் போகாமல் முடங்கி விட்ட வாழ்க்கை .

மறுபடியும்      ஆபீஸ் போனால் ஒரு இன்ப அதிர்ச்சி .

கிடைப்பதே  கடினம் என்று நினைத்திருந்த   நோயிடாவிற்கான  டிரான்ஸ்பர் ஆர்டர்  கையில் .


ட்ரான்ஸ்பர்  கிடைக்க முக்கிய காரணமே இந்தப் பூனையால் தான் என்கிற  "தெளிவு " வந்து பூனை மீதிருந்த கோபம் போய்  பக்தி  Returns .

"டெங்கு "விற்கும் பூனைக்கும் என்ன சம்பந்தம் , கொசு வால் தானே  டெங்கு  ?
என்று மனது சமாதானமாகி  பூனைக்கு மறுபடியும்  பூ, ஊதுவத்தி ,இப்பொழுது  additional ஆக பக்தர்களுக்குப்  பிரசாதம்  வேறு வழங்கப் படுகிறது..

.
மனேகி நெக்கோ கஷ்டம் கொடுக்கலாம் ,ஆனால் கைவிட்டு விடாது என்கிற பன்ச் டயலாக் ஆபீசில்  வைரலாக ......

 இப்பொழுது ஆன்சைட் வேண்டுபவர்கள் ,ட்ரான்ஸ்பர்  வேண்டுபவர்கள் எல்லாம் பூனை இடம்தான்  வேண்டுகிறார்களாம் .

கடையில் அட்டை டப்பாவிற்குள் இருந்த பூனை தானும் கடவுளாக ஆவோம் என்று நினைத்துக் கூட்டப்ப பார்த்திருக்காது.

 குருவும் சுக்கிரனும் சேர்ந்து லுக்  விடுகிறார்கள் போலே .

மறு விஜயம்


யார் செய்த சதியோ  யாமறியோம் என்னுடைய கம்பியூட்டர் மினி  மற்றும் சாதாரண சைசு இரண்டுமே ஒரு சுப முகூர்த்த நாளில் லைட்னிங் ஸ்ட்ரைக் செய்துவிட  மொபைல் போனில் மட்டுமே பிளாக்குகளைப் படித்தேன் . அதில்  ஆட்டோ சஜஷன் வருவதால் நான் ஒன்று டைப் செய்தால் கன்னாபின்னா  என்றுவேறு     ஒன்று
 வருவதால் காமெண்ட் கூடப் போடுவதைத் தவிர்த்து வந்தேன் .

வேறு ஒன்று புதிது வாங்கலாமென்றால் என்   மூத்த மகன் என் இரண்டாவது மகன் திருமணத்திற்கு  இங்கு வரும்போது வாங்கித் தருகிறேன் . நீ பிளாக் எழுதாவிட்டால்  சுனாமி நில நடுக்கமெல்லாம் வராது என்று சொன்னதன் பேரில் பிளாக் எழுத வில்லை .
கமெண்ட் பக்கம் தலை வைத்துப் படுத்தாலும் தடா வாகிப் போனது.

எனவே  நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் பிளாக் பக்கம் வருகிறேன் .
ஒரு வழியாக இரண்டாவது மகனின் திருமணமும் நவம்பர் 3௦ ம் தேதி நல்ல மழையாக இருந்தாலும் சிறப்பாக நடந்து முடிந்தது .
புது மாதிரியான லாப் டாப் .
external கீ போர்ட் இல்லாமல் மவுசு இல்லாமல் டைப் செய்வது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.

பழக கொஞ்சம் டயம் பிடிக்கும் போல .
இனிமேல் தான்  பிளாக் எழுதணும்.
  

Sunday 20 August 2017

என்னைக் கவர்ந்த போட்டோ


இன்று உலக போட்டோ தினம் .

எல்லாருமே பல போட்டோ களைப் பற்றி எழுதினாலும்

என் மனதிலிருந்து அழிக்க முடியாத நான் எடுத்த போட்டோ  இது .




 இது பற்றி ஏற்கனவே பதிவு எழுதி இருக்கிறேன் .

இருப்பினும் திரும்ப எழுதுகிறேன் .

. இந்தப்  புல்லுக்குத் தான் எப்படியாவது  வளர வேண்டும் என்ற விடாமுயற்சியால் மட்டுமே அவ்வளவு பெரிய ஸ்பாஞ்சு தடையாக இருந்தாலும் அதையும் மீறி வளர்ந்து உள்ளது.


அந்தப் புல்லால் பக்கத்தில் உள்ள செடிகளிடம் மனிதன் மாதிரி தன் குறையைச் சொல்லி அழ முடியுமா ?

அல்லது மனிதர்கள் மாதிரி கோயில் குளம் என்று போய் வர முடியுமா ?

பரிகார பூஜை எதுவும் செய்ய முடியுமா ?

எங்கேயாவது லஞ்சம் எதுவும் கொடுக்க முடியுமா ?

இல்லை வளருவதற்க்கென்று ஏதாவது டானிக் தானாகவே எக்ஸ்ட்ரா எடுத்துக்கொள்ள  முடியுமா ?


 முயற்சி முயற்சி முயற்சி   இதைத்தவிர  வேறு எதுவுமே இல்லை .

எப்போவெல்லாம்     எனக்கு மனசு விரக்தியாக ஆகிறதோ அப்பல்லாம் நான் இந்த போட்டோ வைத்தான்  எனக்கு இன்சுபயரிங் ஆக எடுத்துக் கொள்வேன் .

பொய் சொல்லும் பிம்பங்கள்



  கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்காத நாளில்லை

பிம்பம் நம்மை அழகாகக் காட்டினால்  சந்தோஷப் படுகிறோம்.

அழகு குறைவாகாக் காட்டினால்   ஏதாவது ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ  நிறத்தை மாற்றியோ  தலை அலங்காரத்தை மாற்றியோ , டிரஸ்ஸை மாற்றியோ ஏதாவது பண்ணி  நமக்கு சரி என்று தோன்றும் வரை செய்கிறோம்

ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய ஒரு வகையான பிம்பம்
நம்மை அறியாமலே உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்
என்னைப்பொறுத்தவரை ,உடையில் ,சிகை அலங்காரம் , சிரிக்கும் முறை பேசும்  போது உள்ள முக பாவம் இவைகளை   நிலை நிறுத்திக்கொள்ள விரும்புகிறோம்,


ஆனால் நாம் நம்மைப் பற்றிக்  கொண்டுள்ள பிம்பம்  என்பதும்
(அழகு மட்டுமல்ல ) மற்றவர்கள் நம்மைப் பற்றி  உருவாக்கி வைத்துள்ள பிம்பத்திற்கும்  நிறைய வேறு பாடுகள் வரும்போது தான் கண்ணாடி பொய் சொல்லுகிறதோ என்று தோன்றும்.

கண்ணாடி மட்டுமல்ல  .

 டிகிரி சர்டிபிகேட் எனப்படும்  ஒரு பெரிதும் மதிக்கப்படும் A 4 சைசு தாள் கூட பல சமயங்களில்  பொய் பிம்பம்தான்  காண்பிக்கிறது.

நல்ல கல்லூரியில் படித்து   நல்ல மார்க் வாங்கியவரை   விட (பொது புத்திப் படி மிகத்திறமைசாலி என்பதின் அடையாளம் )  மிகச் சாதாரணமான கல்லூரியில்  படித்து சுமாரான மார்க் வாங்கியவர்கள்   (இதெல்லாம் வேலைக்காதுன்னு   நாம  அசட்டுத்தனமாக  நினைச்சிட்டு இருக்கற ) நிறைய சம்பளத்துடன் உள்ள வேலை பார்க்கும் போது  எனக்கு அப்படித்தான் தோன்றும் .


 சில ஹோட்டல்களுக்குப் போனால்  உடனே சாப்பிட்டுப் பார்க்கணும் போல அழகான ஒரு சைட்  டிஷ் அல்லது  மெயின் டிஷ்  காட்சியில் (DISPLAY ) வைத்திருப்பார்கள் .

சாப்பிட்டுப்  பார்த்தால் நாம் எதிர்பார்த்த  அளவுக்குச் சுவையாக இருக்காது.

இன்டர் நெட்டில் டிவியில்  சில சமையல் உப காரணங்கள்  காட்டுவார்கள்  , நொடியில் முடிக்கலாம்    என ஜால   வார்த்தைகளுடன்  அழகான பொண்ணு ஒண்ணு  சிரித்த முகத்துடன் அனாயாசமாகச் செஞ்சு காட்டும்  அல்லது     நமக்குப் பார்த்துப் பழக்கப் பட்ட நல்லவர் ரோலில் நடித்த நடிகை /நடிகர் சொல்லுவார்     நாமும் அங்கு ஓடும்  எண்ணுக்கோ அல்லது விளம்பரத்தில்  உள்ள  நம்பருக்கோ  உடனடியாகப் போன் போட்டு   வாங்கிடுவோம் .

பிறகு ஒரு ஆறு மாதத்திற்கு அப்புறம்    அது மேல்தட்டு வர்க்கம் ரேஞ்சுக்குப் போய்விடும் ( பரணுக்குத்தாங்க).

வங்கிப் பணியாளர் தேர்வு மற்றும் ஜப்பானிய மொழித்தேர்வு இவற்றுக்கெல்லாம் நான் கண் காணிப்பாளராகப் போய் இருக்கிறேன்

பல நேரங்களில் நேரில் பார்க்கும்  பரீட்சை எழுதும் முகமும் ஐடென்டிட்டி கார்டில் உள்ள முகமும் வேறுபட்டுள்ள மாதிரியான அனுபவம் எனக்கு உண்டு.
. அட்ரெஸ்  மற்றும்  பேர் ஸ்பெல்லிங் இவை சரியாக இருக்கா  ,இன்னும் வேறே மாதிரியான குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு  சரி பார்ப்பேன்  அல்லது  பாத்து  ஒப்பேத்திடுவேன்
ஆதார் அட்டை பத்திச் சொல்லவே வேண்டாம்.

ஒரு சிலர்  வாட்ஸ் அப்   பேஸ்  புக் இவற்றில் அறிவுரைகளாகப் பொழிந்து தள்ளுவார்கள் ,  
உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியெல்லாம் பேருரைகள் போடுவார்கள்  
மருத்துவக் குறிப்பு எல்லாம் சொல்வார்கள்

ஐயோ  இவங்க இவ்வளவு முறைப்படியான வாழ்க்கை நடத்துவப்பவர்களா என்று  நம்மை எண்ண  வைக்கும் படி  ஒரு நாளைக்கு பல மெசேஜு அனுப்புவார்கள்  

ஆனால் அதில் எதையுமே பின் பற்றமாட்டார்கள்

டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்குக்குப் போய் சாமான்கள் வாங்கினால்
"இது உடையவே உடையாது .
படியா குவாலிட்டி  ( நல்ல சாமான் ) " என்பார்கள் 
கீழே போட்டு உடைத்துக் காண்பிப்பார்கள்

"இஷ்ட்ராங்கு "என்று அழுத்திச் சொல்லுவார்கள் 

 ஒரு குண்டு ஆள் அதுமேல உக்காந்து காமிப்பார்.

விலையோ சென்னையை விட 60 %   குறைவாக இருக்கும்.

   தலை யெல்லாம்    மூளை (?)  உள்ள நாமளும் வெகுவாகக் கவரப்பட்டு  வாங்கிடுவோம் . சென்னை யில் உள்ள வீட்டுக்குக் 
 கொண்டு வருவதற்குள்    நசுங்கியோ உடைந்தோதான்  இருக்கும் .


 பிம்பங்கள் பல சமயங்களில்  நம்மை ஏமாற்றுகின்றன .




Monday 14 August 2017

வெங்காய கப் பீர்க்கங்காய்


இது எனது  மூளையில்      உருவான   சொந்தத்  தயாரிப்பு.

  தேவையான பொருட்கள் :
பீர்க்கங்காய்  மீடியம் சைஸ் 1
உருளைக்கிழங்கு   மீடியம் சைஸ் 2
 கார்ன் ப்ளோர்  2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 1-2 காரத்திற்கேற்ப
உப்பு  தேவைக்கேற்ப
எண்ணெய்   4 டேபிள் ஸ்பூன்

செய்முறை
 முதலில் பீர்க்கங்காயை நன்கு கழுவிவிட்டு   மிக லேசாக வதக்கிவிட்டு
(ஈரம் ,நீர்த்தன்மை போக )
மிக்சியில்  போட்டு பச்சை மிளகாயுடன்மைய அரைக்கவும் .

பிறகு உருளைக்கிழங்கு களை   வேகவைத்து   நன்கு மசிக்கவும் .
உப்பு சேர்த்து  பீர்க்கங்காய் கலவையுடன் பிசைந்து கொள்ளவும்.
கொஞ்சம் நீர்க்க இருந்தால் கொஞ்சம்  கார்ன்  ப்ளோர்  சேர்த்துப் பிசையவும் .
பிறகு ஒரு  பெரிய வெங்காயம்  ஒன்றை எடுத்துத்  தோல் உரித்தபின் 
பாதியாக வெட்டியபின்  இது போன்ற கப்புகளாக பார்த்துப் பிரித்து எடுக்கவும்.
(ஓரமாக முதலில் விரல்  நகத்தால் பிரித்தால் இதே போன்று எடுக்கலாம் .


 பிறகு இந்த கப்புகளில் பிசைந்த பீர்க்கங்காய் கலவையை நிரப்பவும் .



அடுத்து எண்ணெய் தடவிய ஒரு பாத்திரத்தில் இந்த கப்புகளை ஆவியில் வேக வைக்கவும்.( முன்பே  சூடு  பண்ணிய  இட்லிப் பாத்திரத்தில் பத்து நிமிடங்களுக்கு மட்டும் )

 பிறகு ஆறிய பின்  ஒரு பானில் அல்லது   மேலே உள்ளவாறு  தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வதக்கவும் .
 நான் கிரில் பானில் வதக்கினேன் .
கோடு கோடாக வரும் என்பதற்காக . பேக்கிங் ஓவன் இருந்தால் பேக் கூட  செய்யலாம் . என்னுடையது இப்போது என் கைவசம்  இல்லை 



டேஸ்ட் என்றால்  டேஸ்ட் அவ்வளவு டேஸ்ட் .

 சாம்பார் சாதம் ,தயிர் சாதம் , தக்காளி சாதம் ,எலுமிச்சை சாதம் முதல் சப்பாத்தி வரை எல்லாத்துக்கும் சைடு டிஷ் என்று சொல்வதை விட பிக் பாஸ் என்றே சொல்லலாம் .




Sunday 13 August 2017

லாரியில் பயணிக்கும் மனிதர்களும் மாடுகளும்



திரு வெங்கட் நாகராஜ்   அவர்களின்    பதிவில்   வந்த  லாரியில் போகும் மாடுகளின்     போட்டோ   பார்த்ததும்   ரொம்ப நாளாக   எழுதணும்   என்று நினைத்துக் கொண்டிருந்த   விஷயம்   ஞாபகத்துக்கு   வந்தது .


இது போன்று    மாடுகள்   மட்டுமல்ல மனிதர்களையும்   இப்படித்தான் வேலைக்கு அழைத்துச் செல்வதையும்     நான்  பார்த்திருக்கிறேன் .

பொதுவாக  இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் எனச் சொல்லப்படும் பெரிய பெரிய கம்பெனிகளுக்கு கழிவறை சுத்தம் செய்ய , ஆபீஸ்  கூட்ட , மிச்ச  சில்லறை வேலைகள் செய்ய என்று வரும் வேலை ஆட்களை ஒரு சில ஏஜெண்டுகள் இப்படித்தான் லாரியில் நிற்கவைத்தே , அழைத்துச் செல்வார்கள்    

சில சமயங்களில்  ஒரு சிலர் எப்படியோ அட்ஜ்ஸ்  பண்ணிக்கொண்டு  உட்கார்ந்து வருவார்கள் .

அந்த லேடீசை நான் கேட்டதுண்டு .

ஏம்மா ,ரொம்ப நாழி நின்னுக்கிட்டே வந்தா  கால் வலிக்காதா ?

 “காசு  கொடுத்து பஸ்ஸில் வந்தாலும் உக்கார இடமா கிடைக்குது , என்னமோ நம்மள   வூட்டுகிட்டேருந்து  கூட்டிவந்து வூட்டாண்டையே 
வுட்றாங்களே ம்மா”

“பழகிப் போச்சு ,”

“சொம்மா ஒரு அரை   மணித்தொலைவுதாம்மா” 

என்கிற பதில்தான் முக்கால் வாசிப்பேரின் பதிலாகத்தான் இருக்கும் .

 ஆச்சரியபப்டும் வகையில் யாருமே சலிச்சுக்கறதில்லை

ஒரு சிலர் என்னம்மா பண்றது பாக்டரியில்  கூட  நிறைய ஆளுங்க பாவம் அப்படித்தானே வேலை செய்றாங்க என்னமோ நாங்க பொறந்த  நேரம் என்பார்கள் .



அதுவும்  மழை பெய்தால் அவர்களுக்கு  ஒரு பெரிய  பாலிதீன் ஷீட் கொடுப்பார்கள் .  அதைத்    திறந்த லாரியின் நாலு மூலையிலும் நிற்கும்  மற்றும் ஓரமாக நிற்கும் ஆட்கள் பிடித்துக் கொண்டு வரவேண்டும் .
எனக்கென்னவோ பார்க்கவே மனசு கஷ்டமாக இருக்கும் .

 என் வேலையிலும் டீச்சிங்செய்யும் போது நிற்கவேண்டிதான்  இருக்கும் .


தவிர பாக்டரிகளுக்கு    இன்டர்பிரட்டேஷன்  என்றால்   ஒர்க் சைட்டில் இருக்கும்போது   நீண்ட நேரம் நிற்க வேண்டி வரும்போது  கஷ்டமாகத்தான் இருக்கும் .

 இது தவிர சாமானோடு  சேர்ந்து  ட்ரக்கில்  உட்கார வைக்கப் படுவதும் கொடுமை . (படத்தில் உள்ளவர்கள் ஜாலியாக இருக்கிற மாதிரி இருந்தாலும் )


நின்று கொண்டே கடையில்  வேலை செய்யும் பெண்கள் , மார்க்கெட்டிங்  வேலை செய்பவர்கள் , துணிக்கடையில் வேலை செய்பவர்கள் , சில  ஆபீசில் நின்றுகொண்டே இருக்கும் காவலாளிகள்    இவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டு    என் வேலையில்   உள்ள சிரமங்களுக்கு   வருத்தப் படக்கூடாது என்று   என்னை   நானே   சமாதானம்   செய்து   கொள்வேன் .


மாடோ   மனுஷனோ    யாராக இருந்தாலும்  கெட்ட   கிரகங்களின்  கூட்டுச்சேர்க்கையோ அல்லது overstay யோ  சில நேரங்களில் படுத்தும் போல.
 ( படங்கள் கூகுளில் இருந்து சுட்டவை ) நேரே போட்டோ எடுக்க பயம்.


Saturday 12 August 2017

கனடா விஜயம்

கனடா விஜயம் சென்ற மாதம் 13 ம் தேதி அன்று மாண்ட்ரியலில் தன மனைவியுடன் வசிக்கும் எனது மகன் வீட்டிற்கு நானும் என் கணவரும் வந்தோம் . இரண்டு வாரங்கள் வார விடுமுறையில் ஊர் சுற்றினோம் . பிறகு உள்ளுருக்கு உள்ளேயே பல கடைகள் போனோம் . மாண்ட் ராயல் எனப்படும் ஒரு சிறிய மலை ஒன்றிற்கு நாங்கள்மே சென்றோம் . அதன் முன்னால் உள்ள ஒரு பெரிய சிலை இது . மக்கள் இந்த ஏரியாவைச் சுற்றியும் நடக்கிறார்கள் .

Friday 11 August 2017

காலக்கெடு என்பது நமது எதிரியா ?

    
 "இன்னின்ன   காரியங்களை   இந்த   இந்த  காலத்திற்குள்  முடிக்க வேண்டும்  என்று   இருக்கிற  காலக்கெடு    நமது எதிரியா ?"

என்கிற தலைப்பில் இன்று ஒரு  ஜப்பனீஸ் TED x  பேச்சு இன்று கேட்டேன்


அவரின் இந்தத் தலைப்பு   பற்றி 
நான்  அவ்வளவு சிந்தனை எல்லாம் செய்ததாக  எனக்குத் தெரிந்து இல்லை  . 


அப்பப்பா   இந்த புராஜெக்ட் முடிக்கிற வரை நான் வேறே வேலை எதையும் நெனச்சுக் கூட பாக்க முடியாதுன்னு தினம் அங்கலாய்க்கிறோம் .

 கிட்டத்தட்ட  காலக்கெடு  என்கிற வார்த்தையையே   நாம்   ஒரு எதிரி   என்கிற கண்ணோட்டத்தோடு  பார்ப்பது என்னவோ  மறுக்க முடியாத உண்மை
அந்த ஜப்பானியப் பேச்சாளர்  "பெரிய       காலக்கெடு .( deadline )  அதற்குள் ஏகப் பட்ட மினி காலக்கெடுக்கள் . எனவே  மனிதனாய்ப் பிறந்தவர்களுக்கு தினமும் ஒரு காலக்கெடு.
 என்னடா    மனுஷ வாழ்க்கை படா பேஜாராக் கீதே " ன்னு அங்கலாய்ச்சுகிட்டு இருந்தப்ப ....

 பெரிய குறிக்கோள்  எல்லாம்     எதுவும் இல்லாமல்  ஓடும்
ஒரு பூனையைப் பார்த்தாராம் .

ஆஹா ! இந்தப் பூனைக்கு  மனுஷன்  மாதிரி  காலக்கெடு   எதுவும் இல்லையே . எவ்வளவு ஜாலின்னு நினைச்சாராம் .

ஆனா நல்லா  மூளையைக் கசக்கி யோசிச்சப்பறம் தான் தெரிஞ்சது  
காலக்கெடு நம்பளை ஊக்கு விக்க ஒரு உந்து கோலா இருக்கு .

  முதலில் அந்த காலக்கெடுவுக்குள் வேலையை முடிக்க கஷ்டமாகத்தான் இருக்கும் ஆனால்  அதை நாம் ஒரு எதிரி மாதிரி நினைக்காமல் ஒரு நண்பனாக நினைத்தால் நாமே எல்லாவற்றையும் காலக்கெடுவுக்குள் முடித்து விடுவோம் . நாளடைவில் அதற்கு நாம் பழகி விடுவோம்    என்கிற மாபெரும் உண்மை  புரியும் . நீங்களும்  புரிஞ்சுக்கணும் என்று முடிக்கிறார்.


 நானும் என் வாழக்கையில்  எப்படி இருந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தேன் .
அவரின் பேச்சு என்னை ரொம்பவே  motivate  பண்ணியது. 

 நானும் 2017 ஜூலைக்கு  முன்னாடி வாழ்க்கையை  வாஷிங்கு மெஷினில் போட்டு அலசர வேலையெல்லாம் பண்ணக்கூடாது . 


இனிமே எப்படி இருக்கனும்ன்னு ஒரு காலக்கெடு லிஸ்ட் போட்டேன் .
சின்னது தான்
 பெரிய லிஸ்ட்டுக்கும்  நமக்கும் ஒத்து வரவே வராது 
மூணே மூணு விஷயம் 
 ஒண்ணு தேவை இல்லாம இந்த ஆகஸ்ட் மாசம் முதல் சாமான் வாங்கக்கூடாது . 
முள்ளங்கி தினம் சாப்பிடணும்.
வீட்டில் 10 % குப்பை ஆகஸ்ட் முடிவுக்குள் குறைக்கணும்

இந்த ஆகஸ்ட் மாசத்திலிருந்து தேவை இல்லாமல் கடைப் பக்கம் போகக்கூடாது .என்ற தீர்மானத்தை  ஜூலை 26 எடுத்தேன் .
( போனால்   கை  சும்மா  இல்லாமல்  ஏதாவது   சாமான்களை  வாங்குகிறது . )மனதுக்கும் கைக்கும் நடக்கும் பேச்சு வார்த்தையில் மனம் தோற்றுவிடுகிறது  .கைதான் ஜெயிக்கிறது . நான் என் கையைச் சொன்னேன் .

 
 ஒண்ணாந்தேதியிலிருந்து   தானே  வெளியில் போகக் கூடாது  எனவே  30 ம் தேதியே  செடிக்கு மண் கொஞ்சம் (ஒரு மூட்டை ) வாங்கினேன் .
 அது ஒரு ராஜ கம்பீரத்தோடு பால்கனியின்  மூலையில் வீற்றிருக்கிறது .


அதைத் தவிர இந்த 11
நாட்களாக வீட்டிலிருந்து 150 -200 மீட்டருக்கு மிகாமல் தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன் . கறிகாய்கள் ,கீழே உள்ள கடையில் மாளிகைப் பொருட்கள் தவிர வேறு எதுவும் வாங்கவில்லை .


ஆன் லயனிலும் எதுவும் வாங்கத்தெரியாது .வேண்டுமென்றே அந்தக் கலையை  இது வரை கற்கவில்லை .
...
 மற்றபடி வீட்டில்   சேர்ந்துவிட்ட புத்தகங்கள் மற்ற பொருட்கள் இவற்றில் 
  தூக்கிப் போடஎன்று நிர்ணயித்த 10 % இலக்கு ஹி...ஹி .. 
ரொம்பத் தூரத்தில் இருக்கு . அதான் இன்னும் 20 நாள் இருக்கே !  

கிட்னி ஸ்டோனுக்கோசரம்  முள்ளங்கி வாங்கி வைத்திருக்கிறேன் . ஏனோ சாப்பிடுவதில்லை . அதை  நாளை முதல் செய்யணும் .


காலக்கெடு எனக்கு (உப்பா ,சர்க்கரையா  மாதிரி ) நண்பராகுமா பகைவராகுமா  பொறுத்திருந்துதான் பார்க்கணும்