Monday 18 November 2013

சந்தேகங்கள்-1

   
நாளை முதல் ஒரு மாணவருக்குப் பாடம் கற்பிக்கும் வேலை  ( உலகளாவிய ஜப்பானிய மொழி பரீட்சை 2.12.2013 அன்று இருப்பதால் ) மறுபடியும் இரண்டு வாரத்திற்கு திங்கள் முதல் வெள்ளி வரை  பதிவிற்கு விடுமுறை.
எனவே இப்ப  ஒரு சின்ன பதிவு.
எனக்கு  இந்த சமுதாயத்தில் நடக்கும் பல நிகழ்வுகளைப் பார்க்கும் போது பல சந்தேகங்கள் வருகின்றன .
யாராவது முடிந்தால் ஏன் இப்படி என்று பதில் சொல்லுங்கள் .
தகுந்த சன்மானமாக சனி கிரகத்துக்கான போக வர டிக்கெட்டு
தரலாமா என ஆய்வில் உள்ளது.
சனி நம்மகிட்டே வரதுக்கு முன்னாடி  நம்ப சனிகிட்டே போய்ட்டா  சனி வேறே யார்கிட்டேயாவது போயிடும் என்பது ஐதீகம் (  நம்ப  என்ன சொன்னாலும் மக்கள் நம்புவாங்க  என்ற  அசைக்க முடியாத நம்பிக்கைதான் )
சரி .சந்தேகத்துக்கு வருவோம்.

அங்கங்கே பேப்பரில் காய் கறி வெட்ட ,நொடியில் அரைக்க .ஆட்டோமேடிக்கா   சமைக்க என்று பல வித இயந்திரங்களும் சாதனங்களும் விற்கிறார்கள் .
தெருவிலே கடையிலே எல்லாம் அதை விளக்கமாக செய்து வேறு காண்பிக்கிறார்கள். மக்களும் குறிப்பாக ஆண்களும்  நிறையப்பேர்  வாங்கிக் கொண்டு போகிறார்கள்
தொலைக்காட்சி விளம்பரத்திலும் அதை உபயோகிக்கும் பெண்கள் முகத்தில்
லவலேசமும் சமையல் செய்த அயர்ச்சி தெரிவதில்லை .
நாம் சமைக்கும் போது  மட்டும்எரிச்சல் வருது .ஏன்?
அந்த அம்மா  சிரிச்சிட்டே  சமையல்  நொடியில் ஆச்சுங்குது.
குழந்தைங்களைப்  பார்த்து   அன்பா ஒரு லுக் வுடுது .
ஆனா நிஜ வாழ்க்கையில் குழந்தைங்க  திட்டு வாங்குதே  ஏன்?
சரி பெண்களை விடுங்க பாவம்  குயிக் சமையல் சாதனங்களை  வாங்கிப் போன ஆண்கள் அதை என்ன பண்ணினார்கள் ?

அதை விடக் காமெடி என்னன்னாக்க இத்தனை சமையல்  வசதி இருந்தாலும்  எந்த ஓட்டல் போனாலும்  உக்காரவே இடம் கிடைக்க மாட்டேங்குது ..ஏன்?



Sunday 17 November 2013

அப்பாவும் முப்பத்திரண்டு சோற்று உருண்டைகளும்

சின்ன வயதில் எங்க அப்பா வைத்ததுதான் வீட்டில் சட்டம் .
சாப்பாட்டில் இருந்து படிப்பு வரை .
அதை யாருமே எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாது.
நான் மட்டும் டபாய்க்கும் வழி முறைகள் சில தெரிந்து வைத்ததினால்
சில சமயங்களில் எஸ்கேப் !

மற்றும் கடைசிக் குழந்தை என்பதால் செல்லம் வேறு. 

வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்காந்து  சாப்பிடணும்.
அவரோட உட்காந்து சாப்பிடுவதற்குள் போதும் போதும் ன்னு ஆயிடும் .
கையைக் கீழே ஊணக்கூடாது .
சாப்பிடும் போது பேசக்கூடாது.
அதுவும் 32 உருண்டை கட்டாயம்அவங்க அவங்க கை சைசுக்கு  சாப்பிடணும் இல்லாட்டி செத்தப்புறம் சாமி சாப்பிடாமல் விட்ட பாக்கி உருண்டைகளை கணக்கு போட்டு அதற்கு சரிசமமான சாணி உருண்டைகளை சாப்பிடச் சொல்வாராம் .டெய்லி மிச்சம் வெச்ச உருண்டைகளை கியுமுலேட்டிவ் சிஸ்டமில் கணக்கு  வெச்சு தீட்டி டுவார் என்றெல்லாம் சொல்லி கொடுமைப்படுத்திய காலம் .
திட்டவட்டமாக 32 தான் என்கிற  நம்பரை  எங்கே இருந்து புடிச்சார்
 உலகத்தில் இந்த மாதிரி சாப்பாடு  மிச்சம் வக்கிரவங்களுக்காக சாணி ஸ்டாக்கு சாமி எப்படி  மெயிண்டயின் பண்ணும்   என்கிற கேள்வியெல்லாம் கேட்க நினைத்தேன் அவரிடம் கேட்க முடியாது.அம்மாகிட்டே கேட்டேன் .
வாயை மூடிட்டு சாப்பிடு என்கிற தப்பான லாஜிக்கோட மிரட்ட ... நான் கப் சிப்
அப்பொழுது அவர் பாவம் எனக்கு ஒரு மகன் பிறந்து இனிமே எந்தக் குழந்தையையுமே 32 உருண்டை சாப்பிடச் சொல்லமுடியாத படி ஒரு
செம ஆப்பு வெப்பான் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

 இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியாமல் நான் என் அம்மாவிடம் என் அப்பா வருவதற்கு முன்பே அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே  என்று ஒரு பிச்சைக்கார டயலாக் அடித்து அப்பா  வருவதற்கு முன்னாடியே சாப்பிட்டு முடித்து அவரிடம் இருந்து தப்பித்தேன் .
பிறகு எட்டு ஒன்பது  வயதானதும்அம்மா நீங்களே பாவம் எல்லா வேலையும் செய்யறீங்க  நானே போட்டு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று பொறுப்புள்ள பிள்ளை மாதிரி வசனம் பேசி சுதந்திரம் பெற்றேன் .
அந்த வயசிலேயே அந்தக் காலத்திலேயே எவ்வளவு டிப்லோமேடிக்காக
அணுகியிருக்கிறேன்  பாருங்கள் .

 பிறகு  எனக்கும் மகன் பிறந்தான் .

அவனுக்கு சாப்பாட்டு கொடுப்பதற்கும் போதும் போதும் என்று ஆகிவிடும்.
நான் ஹைதராபாத்  போனால்  இப்பக்கூட  பக்கத்து வீட்டினர்  என் மகனிடம் சாப்பிடுவதற்காக அவன் படுத்திய பாட்டைச்  சொல்வார்கள் .

பெரியவனுக்கு ரெண்டேகால் வயசு இருக்கும் .
சின்னவன் ஒரு நான்கு மாதக் குழந்தை .
நானும் ஆபீசு போக ஆரம்பித்து விட்டேன்.
எங்க அப்பா என் பணிப்பெண் எல்லாருமே எனக்கு குழந்தை வளர்க்கத் தெரியவில்லை
நீ ஆபீசு போனப்புறம் நாங்க எப்படி அவனை சாப்பிட வெச்சு  நல்லா  குண்டாக ஆக்கிடறோம்  பாரேன் ன்னு சவால் .

ஒரு முக்கியமான விஷயம் இந்த இடத்தில்
மத்தியான தூக்கம் இல்லைன்னாக்க எங்க அப்பா வுக்கு மூட் அவுட் ஆயிடும் .
என்னுடன் அவர் வாழ்ந்த 54 வருடங்களில் அவர்  மத்தியான  தூக்கம் தூங்காத நாட்கள் என்றால் ஒரு பத்து நாள் கூட இருக்காது .

கல்யாண வீடோ செத்த வீடோ எதுவானாலும் உட்கார்ந்த நிலையிலேயே அரை மணி தூங்கி விடும் அசகாய சூரர் 

ஒரு ரெண்டு மூணு நாள் எல்லாம் நல்லத்தான் போயிக்கிட்டு இருந்திச்சு .
ஒரு நாள் என் மகனிடமும் இந்த 32 உருண்டை டயலாக்  மற்றும் அதன் விவரங்களை சொல்லியிருக்கார் .
அவருக்கு தெரியலை அன்றைய அவரின் ராசிக்கட்டத்தின்  12 கட்டத்திலிருந்தும் குரு புதன் போன்ற சுப கிரகங்கள்  எல்லாம் காலி பண்ணி போக சனியே 12 கட்டத்திலும் பூந்து விளையாடுகிறார் என்று.

என் மகன் 32 கணக்கு காமிக்க பத்து அப்புறம் இருபது  ஸ்டிரைட்டா முப்பது முப்பத்தி ஒண்ணு முப்பத்தி ரெண்டு என்றெல்லாம்  ஷார்ட் கட் செய்தும் விடவில்லை அப்பாவும் பணிப்பெண்ணும் .

சாப்பிடுடா  சாமி சாணி உருண்டை குடுப்பார் என  தொடர் மிரட்டல் 

பையன் மசியலை 

ராசிக் கட்டத்திலே இருந்த சனி எங்க அப்பா நாக்குக்கு
ஷிஃப்ட்   ஆகி
சாப்பிடுடா கண்ணா  அப்புறம் உனக்கு சாக்கிலேட் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் .
நான் எட்டடி பாஞ்சா எம்புள்ள 16 இல்ல இல்ல 32 அடி பாய்வான் என்கிற  வெவரம் எங்க அப்பாக்கு கிடையாது.
அவனும் சாப்பிட்டு விட்டு  நல்ல புள்ளயா  (என் புள்ள வேறே எப்படி இருக்குங்கிறீங்களா  அதுவும் சரிதான் )கான்ட்ராக்ட் போட்டபடி சாக்கிலேட் கேட்டு இருக்கிறான் .
ஒன்று மட்டும் குடுத்து இருக்கிறார்கள் .
பையன் 32 சாக்கிலேட் குடு இல்லாட்டி சாமி  32 சாணி உருண்டை குடுத்திடும் என்று சொல்லியிருக்கிறான் .
எங்க அப்பா சாப்பாடு  வேறேடா  சாக்கிலேட் வேறே டா
 சாக்கிலேட் சாணி உருண்டை கணக்கில் சேராது என்று சொல்லியிருக்கிறார் .
பையன் விடவில்லை 
சாப்பாட்டுக்கு ஒரு லாஜிக் சாக்கிலேட்டுக்கு ஒரு லாஜிக்கெல்லாம் சாமி வெச்சுக்காது. என்கிற அர்த்தத்தில்
அம்மாதான் சாமி அந்த மாதிரி வேறுபாடெல்லாம் பாக்காது ன்னு சொல்லியிருக்கங்க . ன்னு லா பாயிண்டு எடுத்து வுட்டுருக்கான்

எப்படி என் வார்த்தை யை தெய்வ வாக்காக மேற்கோள்  காட்டியிருக்கான் பாருங்க
அதுவுமில்லாம  சாணி உருண்டை  நீங்க சாப்பிடனும்ன்னாலும் பரவாயில்ல நானில்ல சாப்பிடணும் என்று ஒரே அழுகை ,
அடம் .
இவன் அழுததில் இரண்டாவது குழந்தையும் அழ யாருமே தூங்க முடியவில்லை .
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரப் போராட்டம் .
பக்கத்து வீட்டில் உள்ளவர் முயற்சி செய்தும் விடாமல் அதே டயலாக்  அதே அழுகை
அப்புறம் மத்தியானம்  3 மணிக்கு   சாமிக்கு விளக்கு ஏற்றி வைத்து ஊதுபத்தி காமிச்சு   32 சாக்கிலேட் சாப்பிடாததற்க்கான  சரிசமமான    32 சாணி உருண்டை யை எங்க அப்பாவுக்கும் அந்த பணிப்பெண்ணுக்கும்  ஆன சாணி உருண்டை அக்கவுண்டில்
 சேர்க்கும்படியாக வேண்டிக்கொண்டு
சாமி கே சொல்லிடுச்சுடா ன்னு சமாதானம் பண்ணி  இருக்காங்க .
சைக்கிள் கேப்பில என் பையன் என்ன அறிவு பாருங்க
அப்படியே சாமிகிட்டே சாக்லேட் மட்டுமில்ல சாதம் சப்பாத்தி இட்லி தோசை எதுக்குமே 32 வேணாம்ன்னு சொல்லிடுங்கன்னுருக்கான்.
 மத்தியான தூக்கம் போன எரிச்சலில் எங்கப்பா வெறுத்துப் போய் போடா இனிமே 32 நம்பரையே கணக்குலேருந்து எடுத்துடலாம்ன்னு சொல்லிட்டார்

  


Friday 15 November 2013

பூரிக்கட்டை --->மனைவி----> கணவன்

பூரிக்கட்டையால் மனைவி கணவனை அடிப்பது போல பல ஜோக்குகள்  சின்ன வயதிலிருந்து  படித்திருக்கிறேன் .


அதுமட்டுமல்ல சில பதிவுகளிலும் இதை  நிறையப் பேர்கள் மனைவிக்குப் பயந்ததுபோல் ஒரு இமேஜ் உருவாக்கும் பொருட்டு இந்த உதாரணத்தை சொல்லுகிறார்கள் .

இந்தப் பதிவின் நோக்கம்

அவர்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியமா
இந்த மாதிரி நிஜமாகவே பூரிக்காட்டையால் அடிக்கும் /அடிவாங்கும் ஒரு பாரம்பரியம்  எப்பொழுது ஆரம்பித்தது  , (அதன் வரலாறு )
அதுவும் இட்டிலியை  காலை உணவாகக்கொண்டுள்ள தமிழ் நாட்டில் எப்படி நுழைந்தது
போன்றஇன்ன பிற  பரிமாணங்களில் பார்ப்பதுதான்.


வரலாறு என்றால் எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்துதான் சொல்லமுடியும்
நான் சுமார் 1961ம் வருடத்திலிருந்தே படிக்க ஆரம்பித்து விட்டேன் .
பாடம் என்று அர்த்தம் கொள்ளாதீர்கள் .
குமுதம் விகடன் தினத்தந்தி போன்றவைகளை நான் ஸ்கூலுக்குப் போகாததால் என் அம்மா சமையல் வேலை மற்றும் வீட்டு வேலைகள் செய்தபடியே என்னைப் படிக்கச் சொல்லி அவ்வப்போது  தப்பாகப் படித்தால் திருத்து வார்கள்
.ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் என்று ஒரு பகுதி வரும் தினத்தந்தியில் . அதிலும் நான் இதைப் படித்ததாக ஞாபகம் .
அதற்கு பூரிக்கட்டை என்றால் என்ன என்றும் ஜோக்கின் பொழிப்புரை பதவுரை  களை என் அம்மாவிடம் விளக்கம் கேட்டு பூரிக்கட்டை பற்றிய உபயோகங்களை ஹி .....ஹி ....தெரிந்து கொண்டேன்.
சுமாராக ஒரு சிறு குறிப்பு வரைக கேள்விக்கு பதில் எழதும் அளவுக்கு விஷய ஞானம் பெற்றேன் .
எனவே பூரிக்கட்டையால் அடிக்கும் பழக்கம் 1960களில் இருந்ததற்கு ஆதாரமாக 1960ம் வருட தினத்தந்தியில் மேட்டர்  உள்ளது.
வேறு ஏதேனும்  அதற்கு முந்திய ஆதாரம் இருப்பதாக யாராவது தெரிவித்தால் அதை இதில் சேர்த்து  முடிந்தால் விக்கி பீடியாவில் கூட சேர்க்கும் எண்ணம் உள்ளது.

எனக்கு இதில் ஒரு  சந்தேகம் என்னவென்றால்
 பூரி அல்லது சப்பாத்தி செய்து முடித்ததும் பொதுவாக அந்த பூரிக்கட்டையைஅப்பாடா வேலை ஒரு வழியா முடிந்தது என்று  ஒரு கடாசு கடாசுவதுதான் பலரது பழக்கம் .
மறுபடி வேலை செய்யும் போது தேடாமல் இருக்கும் மாதர்கள் ரோம்பக்குறைவு.
அப்படி இருக்கும்போது கோபம் வந்தால் கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது தானே பாரம்பரியம்?
பூரிக்கட்டையை தேடி ....கண்டுபிடித்து ...அப்புறம் அடிப்பது ....ம்ஹூம் ..சான்சே இல்லை .
ஒரு வேளை ரெகுலராக அடிப்பவர்கள்  அதை ஒழுங்காக  அதாவது தேவைப்பட்டபோது  எடுக்க வசதியான இடத்தில் வைப்பார்களோ என்னவோ யாமறியேன்.
இந்த பாயிண்டிலும் ஃ பீட்  பேக்குகள் வரவேற்கப்படுகின்றன .

மேலும் பூரிக்கட்டையால் அடிப்பதனால் நாள் வாரியான அல்லது மாதவாரியான ஆசுபத்திரி அட்மிஷன்கள் பற்றிய விவரம் எதுவும்
இருப்பதகாவும் தெரியவில்லை .
உதாரணமாக  தீ விபத்து ,வாகன விபத்து ,போன்று பூரிக்கட்டை விபத்து ,என்ற ஒரு டேட்டா உள்ளதா அதன் சதவிகிதம் என்ன என்றும் எனக்குத் தெரியவில்லை.
ஆதாரம் இருந்தால்  எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பதிவு தேத்திடலாம்.

பூரிக்காட்டையால் அடிக்கும் /அடிவாங்கும் நபர்கள் இது சம்பந்தமான முழு விவரங்களை முன் வந்து அளிக்கலாம் .
தகுந்த சன்மானமாக பூரிக்கட்டை (உடையாதது ) அளிக்கப் படும்.

எனக்கு ஒரு முக்கிய சந்தேகம் .
தொழில்நுட்பம் பல்கிப் பெருகிவரும் இந்நாளில் சப்பாத்தி மேக்கர் ஏன் ரெடிமேட் சப்பாத்தியே பாக்கெட்களில்  சக்கை போடு போடும் இந்நாளில் கூட
அதே பூரிக்கட்டைதானா?
மாற்றமே இல்லையா?

ஒருவேளை  பூரிக்கட்டையால் ஆயிரம்  அடி வாங்கிய அபூர்வ சிகாமணி தான் பாக்கெட்டுகளில் விற்கப்படும் சப்பாத்திகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானியோ?
இருக்கலாம்
நதிமூலம் ரிஷிமூலம்  ரொம்பவே சுவாரசியமாக இருக்கும் .
யார் கண்டது?
கடைசியாக
வட இந்தியாவில் பூரிக்கட்டை உடைந்தால் அபசகுனம் என்றும் வீட்டுக்கு ஆகாது என்றும் சொல்வார்கள் .
எனவே சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்த காலத்தில் என்றெல்லாம் விடும் புரூடா க்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா .
அதனால் வடஇந்தியா விலிருந்து வந்திருக்க முடியாது என்பது என் எண்ணம் .
வடஇந்தியா வில் பூரிக்கட்டைக்கு பதில் வேறு ஏதாவது ஒரு மாற்று சாதனம் உபயோகித்திருந்திருக்கலாம்
மேலும் ஆந்திராவில் பூரிக்கட்டை பிரயோகம் இருந்த மாதிரித் தெரியவில்லை.
 கர்நாடகாவிலும் கேரளாவிலும் இல்லை என்றால் இது முழுக்க முழுக்க
நமது தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரியமாகக்  கொள்ளலாம்

Friday 8 November 2013

வாங்காத புடவை .

ஒரு  வாரமாக வேலைக்குப்

 போய்கொண்டிருந்ததால்  பிளாக் எதுவும் எழுத முடியவும் இல்லை .;

மற்ற பிளாக்குகளைப் படித்து பின்னூட்டாம் எதுவும் எழுத முடியவில்லை

எழுத நிறைய மேட்டர் இருக்கு ,

காலையில் 7.30 க்குக் கிளம்பினால் வர அதே மாதிரி 7.30 மணி ஆவதால் இந்த நிலைமை .

அடுத்த வாரமும் வேலை இருப்பதால் பதிவிற்கு விடுமுறை.

இருந்தாலும்  ஒரு மினி இட்லி சைஸில்  குட்டியூண்டு  பதிவாவது போடலாம் என்று நினைப்பதால்  என்னால் மறக்கமுடியாத ஒரு கவிதையுடன் ஒரு  பதிவு .

சுமார் 30 வருடம் முன்பு படித்தது .

ஆஹா என்ன ஞாபக சக்தி என்றெல்லாம் நினைத்தால் நான் அதற்குப்
பொறுப்பல்ல .

  ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தேன்

எழுதியது யார் என்று தெரியவில்லை .

மனதில்  நிறைந்து  கனவில் விரிந்து

உணர்வில் கலந்து  உயரில் அமர்ந்து

பகலிலும் இரவிலும் நினைவில் உறைந்து

பாடாய்ப்  படுத்துவதே வாங்காத புடவை .

சூப்பர்ல்ல!