Tuesday 10 January 2023

ஞாபகமும் மனப்பழக்கம்

 


ஞாபகம் என்பது நன்கு படிப்பவர்களுக்கு மட்டுமே கைகூடும் ஒரு விஷயம் என்பதும் அவ்வளவாக படிக்காதவர்களுக்கு அது கைகூடாத ஒரு சமாச்சாரம்என்றும்  கருதப்படுகிறது .ஆனால் நிஜத்தில் நன்கு கூர்ந்து பார்த்தால் இது தவறான ஒரு கருத்து என்று புரிந்து கொள்ளலாம்.

 

உதாரணமாக மளிகைக் கடையில் வேலை பார்க்கும் பேப்பரில் பொட்டலம் கட்டிக்  கொடுக்கும் பணியாளர்களிடம்  ஒரு அதீத ஞாபக சக்தி இருப்பதை நாம் யாரும் கவனிப்பதில்லை. சூப்பர்மார்க்கெட் அல்லது  மால்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் இதில் சேர்த்தி கிடையாது.

  துவரம் பருப்பு பயத்தம் பருப்பு கடலைப்பருப்பு   அரிசி மற்றும் சகல வித மளிகை பொருட்களிலும்  அவற்றின் விலை எழுதி வைப்பது இல்லை  ஆனால் அங்கு வேலை பார்ப்பவர்கள் ஒவ்வொரு  வகை பொருட்களின் ரக வாரியான  விலை (பச்சரிசி புழுங்கரிசி இட்டலி அரிசி பொன்னி அரிசி சீரகச்சம்பா அரிசி) என்ன என்பதை அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

 அந்தக் பொருட்களின்  விலையானது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். கறிகாய்களின் விலை  தினம்தினம் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால்  இவற்றை எல்லாம் அவர்கள் ஞாபகம் வைத்திருப்பது என்பது ஒரு பெரிய விஷயம் . இதெற்கென்று  அவர்கள் இன்டக்ஷன்   ட்ரெய்னிங்கோ அல்லது   கோச்சிங் கிளாஸோ  போவதில்லை. என்பதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்

 அது தனது  தின வாழ்க்கையின் ஒரு வேலையாகவே நினைத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு அவற்றை ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பது என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது அவர்களின் வாழ்வாதாரம் .எனவே அவ்வளவாக மெனக்கெடல் இல்லாமல் செய்ய முடிகிறது

 இதேபோல நான் பம்பாயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு ஒரு பியூன் அவன் கிளியரிங்குக்கான செக் எடுத்துக்கொண்டு பம்பாய் சென்ட்ரலுக்கு செல்ல வேண்டும்.

85-86 காலகட்டங்களில் காலை மாலை இரு வேளையும் கிட்டத்தட்ட 800 செக்குகள் எடுத்துச் செல்ல வேண்டும்.

 எங்கள் ஆபீஸில் வேலை பார்க்கும் கிளார்க்கால் அவற்றை என்ட்ரி போட மட்டுமே நேரம் இருக்கும் டோட்டல் செய்வது என்பது முடியாத காரியமாக இருந்தது .நேரமிருக்காது.. எனக்கு அவைகளைச் செக் செய்யமட்டுமே நேரம் இருக்கும்இருந்தும் முடிந்த அளவு  நான் கொஞ்சம் டோட்டல் போடுவேன் மிச்சமெல்லாம் அந்த பியூன் தான் ட்ரைனில் போகும்போது  டோட்டல் செய்வான்.


அவனுடைய ஸ்பெஷாலிடியே இரண்டு இரண்டு டிஜிடாகக் கூட்டுவான் 69+47,78+94 என்று.

எங்கள் பிராஞ்சில்  ஒரு MSC Maths கோல்ட் மெடலிஸ்ட் இருந்தார் அவரால் இது முடியவில்லை. இத்தனைக்கும் அந்த பியூன் ஏழாவதுபடிக்கும் போது ஸ்கூல் டிராப் அவுட்.

 அதற்கான காரணம் என்னவென்றால் அவன் ஏழாவது படிக்கும்போது ஒரு கணக்கு .

ஒரு மாடு அதாவது செக்குமாடு வட்டமாக ஒரு இடத்தில் எண்ணெய்  எடுப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறது .மாடு சுற்றும் ஏரியா வின் பரப்பளவை கண்டுபிடிப்பதற்காக இருபத்தி இரண்டு கீழே ஏழு என்ற ஒரு பார்முலாவை போடவேண்டும்.

அவன் டீச்சரிடம் ஏன் இருபத்தி 22கீழே 7 என்று வருகிறது . 21 /7 என்று இருந்திருந்தால்  கரெக்டாக மூன்றால் வகுக்க முடிகிறதே?எதற்காக 22 என்று வேலை மெனக்கெட்டு போட்டிருக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறான்  .

அதற்கு அந்த டீச்சர் கோபப்பட்டுக் கொண்டு

"நான் சொன்ன மாதிரி கணக்குப்  போட துப்பில்லை வெட்டிக்கேள்வி என்ன வேண்டிக்கிடக்கிறது  ?"

நாலு சாத்து சாத்தி கன்னா  பின்னா என்று திட்டி இருக்கிறார்கள் .

இவன் டீச்சரிடம்  கோபப்பட்டுக்கொண்டு  ஸ்கூலுக்கு போகாமல் இருந்து விட்டான் .

பிறகு ஏதேதோ வேலைக்கு எல்லாம் போய்விட்டுக் கடைசியில் பாங்கு  வேலைக்கு வந்துவிட்டான்.

 பியூன் வேலைக்கு வந்த பிறகு அவனுக்கு  டோட்டல் போடுவது என்பது ஒரு அத்தியாவசியமான தேவையாகி விட்டது ஏனெனில் அவனுக்கு  இதில் தினம்  210 ரூபாய் 220 ரூபாய் கிடைக்கும். அந்தக் காலத்தில் இந்த தொகை கொஞ்சம் கணிசமான தொகை .

 இந்த வேலைக்கு வந்த பிறகு இந்த டோட்டலிங்கை எப்படி வேகமாக செய்வது என்பதை யோசித்து அவன் இதுபோன்று இரண்டு இரண்டு  டிஜிட்டுகளாக  கூட்ட ஆரம்பித்துவிட்டான்.  இதனால் அவனுக்கு அங்கு கிளியரிங் ஹவுசில்  நல்ல பெயர் உண்டு.

எல்லாமே  தேவையும் மனப் பழக்கமும் தான்.