Wednesday 31 October 2018

பரீட்சை காமெடிகள்


 பரீட்சை என்றால்  60  -70  களில் எல்லாம் சீரியஸான முகத்துடன்  நெற்றியில் அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தாற்போல் விபூதி  குங்குமம் நாமம் செந்தூரம் போன்றவைகள்  நெற்றியில்  வைக்கப்பட்டிருக்கும் . இவற்றை இட்டுக்கொண்டால் நாம் படித்த பாடத்திலிருந்து மட்டுமே கேள்விகள் வரும் , நாமும் பாஸ் பண்ணிவிடலாம் என்று பரவலாக நம்பப்பட்டது.

 நான் படித்தது திருச்சியில் என்பதால் எஸ் எஸ் எல் சி பரீட்சை அன்று காலையில் தந்தை/தாய்  சகிதம் அல்லது தனியாக  பல மாணவர்கள்  மலைக்கோட்டை கீழே உள்ள மாணிக்க விநாயகர் சந்நதியில் ஆஜராகி இருப்பார்கள் . ஹி ஹி நானும் கூடத் தான் .

நாங்கள் பரீட்சைக்குக்     கிளம்பும்போது சகுனங்கள் பார்ப்பார்கள் . பூனை நிச்சயம் கிராஸ் பண்ணக்கூடாது . பால் கொண்டு வருபவர் எதிரில் வரக்கூடாது போனால் போகட்டும் போன்ற அபசகுமான பாடல்களைத் தவிர்க்கும் முறையாக ரேடியோ வைக்கமாட்டார்கள் .இன்ன பிற ...

என்னால் மறக்க முடியாத ஒரு நம்பிக்கை நாம்  படிக்கும் போது கழுத்தை கத்தினால் அந்த chapter லிருந்து கேள்வி வருவது சர்வ நிச்சயம் .என்று நம்பப்பட்டது.  கேள்வி செட் பண்ணுபவருக்கும் கழுதைக்கும் நாம் படிக்கும் chapter க்கும் என்ன மாதிரி டெலிபதி என்று தெரியவில்லை இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது  ( திருச்சியில் அந்தக் காலத்தில் கழுதைகள் நிறைய இருக்கும்)

 பிறகு நான் வேலை கிடைத்து சென்னையில் ஹாஸ்டலில் தங்கி இருந்தபோது வேறு நல்ல வேலைக்கு முயன்றுகொண்டிருந்தபோது இந்த சகுனங்கள் எல்லாம் பார்க்க முடியவில்லை , கிட்டத்தட்ட இவையெல்லாம் மறந்து விட்ட சமாச்சாரங்களாகவே போய் விட்டன 

. ஆனாலும் என் அதிர்ஷ்ட பென்சில் பாக்ஸ்  மட்டும்  எல்லாப்  பரீட்சைகளிலும் எல்லா ஊர்களிலும்  என் கூடவே வந்துவிடும் . இது பற்றி முன்பே ஒரு பதிவில் ஃ போட்டோவுடன் எழுதிவிட்டேன்.



என் மகன்கள் படித்த காலங்களில் நான் வேலையில் இருந்ததால் இவைகளை எல்லாம் பார்க்கவில்லை .

 ஆனால் அவர்கள் பத்தாவது பன்னிரண்டாவது பரீட்சை எழுதிய எல்லா நாட்களிலும் மூன்று மணி நேரம் சாமி ரூமில் உட்கார்ந்து அங்கு பரீட்சை ஆரம்பிக்கும்  நேரத்திலிருந்து முடியும் வரை  தொடர்ந்து சாமி கும்பிடுவேன் 
.
10 மணிக்குப் பரீட்சை என்றால் பாத் ரூம் எல்லாம் போயிட்டு வந்து வீட்டை வெளிப்பக்கமாகப் பூட்டி விட்டு உட்காருவேன் , இது வாலண்டரி ரிட்டையர் மெண்டு வாங்கியதால் சாத்தியமாயிற்று  முடிந்தவரை நடுவில் எழுந்திருக்க மாட்டேன் , ஏனெனில் என் அம்மா எங்களுக்கு அப்படிச் செய்த காரணத்தால்.
 ஒரு 5  வருடம் முன்பு ஜப்பானிய பரீட்சை எழுதினேன் , அப்போது என் ஜப்பானியத் தோழி என்னிடம் சொன்ன விஷயம் .
எந்தக்காரணத்தைக் கொண்டும் தலைக்குக் குளிக்க வேண்டாம் , அப்படிச் செய்தால் படித்ததெல்லாம் தண்ணியோடு போய்விடுமாம் .
பிறகுதான் தெரிந்தது ரஷியாவிலும் இந்த நம்பிக்கை உண்டு . பரீட்சை அன்று தலை குளிக்கமாட்டார்கள் என்று

இரணடாவது டிப்ஸ் மறக்காமல் கிட்-கேட்  (kit -Kat) சாக்லேட் வாங்கிச் சாப்பிடணும் . பாஸ் நிச்சயம் என்றாள். கிட் கேட் என்பதை ஜப்பானியர்கள் கித்தோ கத்சு என்பார்கள் அப்படி என்றால் நிச்சயம் வெற்றி என்று பொருள் .

என் தோழி ஒருத்தி ஸ்கூல் படிக்கும் போது தலை வாராமல் வருவாள் , ஏனென்றால் படித்ததை எல்லாம் சீப்பு அப்படியே  வாரிக்கொண்டு போய்விடும் அது ரிசல்ட்டை வாரிவிட்டுவிடுமாம் , முதல் நாள் இரவே தலை சீவி விட்டுக்கொண்டு விடுவாள்.

சிலர் பரீட்சை க்கு என்றே தனி பேனா வைத்துக்  கொள்வார்கள் .
ஒரு சிலர் பரீட்சைக்கு என்றே ராசியான டிரஸ் வைத்துக் கொண்டு அதையே  தொடர்ந்து இருக்கும் பரீட்சை  நாட்களிலும் தினமும் போட்டுக் கொண்டுவருவார்கள் ,

 இன்னும் சிலர் இட்லி  தவிர்ப்பார்கள் , ( வெள்ளை முட்டை மாதிரி இருப்பதால் ) எங்க வீட்டில் வத்தக் குழம்பு  ஊற வைத்த பருப்புகள் கொண்டு செய்யும் குழம்பு கூட்டு கறி,,பாகற்காய் சுண்டைக்காய் கறி  செய்ய மாட்டார்கள் .

இதையெல்லாம் என் மகனிடம்  சொன்னபோதுஅவன் சொன்ன காமெண்ட் " அப்ப   நீ  ஒழுங்காகப் படிக்காமல் இப்படித்தான் கழுதை கத்தின பாடம் , ராசியான பென்சில் டப்பா பாட்டியோட பிரார்த்தனை  இதுங்களால தான் பாஸ் பண்ணிட்டே வாழ்க்கையை ஓட்டிட்டியா  ?


 வெளி வேலைகளும் வீட்டு வேலைகளும் சேர்ந்து கொண்டதால் பிளாக் பக்கமே  வர முடியவில்லை .


18 comments:

  1. உங்கள் மகன் கைட்ட கேள்வி ரசித்து சிரிக்க வைத்தது.

    ReplyDelete
  2. பரீட்சை காமெடிகள் என்று சொன்னாலும் , இவையெல்லாம் சில நம்பிக்கைகள்.

    //ஜப்பானியத் தோழி என்னிடம் சொன்ன விஷயம் .
    எந்தக்காரணத்தைக் கொண்டும் தலைக்குக் குளிக்க வேண்டாம் , அப்படிச் செய்தால் படித்ததெல்லாம் தண்ணியோடு போய்விடுமாம் //

    எப்படி எல்லாம் நம்பிக்கைகள் இருந்து இருக்கிறது என்று வியக்க வைக்கிறது.


    உங்கள் மகன் கேட்ட கேள்வியும் இப்போது சிந்திக்க வைக்கும் இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி . என் மகன் சிறிய வயதிலிருந்து கேட்கும் கேள்விகள் பல என்னை ச் சிந்திக்க வைத்துள்ளது

      Delete
  3. சிரிக்க வைத்த ரசிக்க வைத்த நினைவுகள். ராசியான பேனா நம்பிக்கை மட்டும் எனக்கு உண்டு. அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை என்பது வேறு விஷயம்!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி . எனக்கும் பென்சில் பாக்ஸ் காலை வாரிவிடுகிறது

      Delete
  4. சிலர் ஆசிரியர்களுக்கு அதிக மார்க், அல்லது பாஸ் மார்க்காவது போட்டுவிடச் சொல்லி அபரீட்சை பேப்பரிலேயே வேண்டுகோள் எல்லாம் வைப்பார்கள். பணம் பின்பண்ணி வைத்திருப்பதும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  5. என் மகன்கள் பரீட்சை எழுதும் நேரங்களிலும் சரி, இன்டர்வியூ செல்லும் நேரங்களிலும் சரி, என் பாஸ் இப்படிபூஜை அறையில் இருப்பதுண்டு. குறைந்த பட்சம் ஸ்பெஷல் விளக்கொன்றை ஏற்றிவைத்து விட்டு அது அணையாமல் பார்த்துக் கொள்வார்.

    ReplyDelete
  6. தேர்வு கால நினைவலைகளையும் நம்பிக்கைகளையும் ரசித்தேன் சகோதரியாரே

    ReplyDelete
  7. ரசித்தேன்; சிரித்தேன். இப்படிப்பட்ட முட்டாள் தனங்கள் இல்லாவிட்டால் வாழ்வு சுவைக்காது.

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. அருணா சிரித்து விட்டேன். எங்கள் வகுப்பில் இப்படியானவை எல்லாம் ரவுண்ட் கட்டி வரும். எங்கள் ஊரில் இருந்து பஸ்ஸில் தான் போகணும் ஸோ என் கஸின்ஸ் ஒரு குறிப்பிட்ட பஸ்ஸில் தான் ஏறுவாள். இத்தனைக்கும் இருந்தது என்னவோ இரண்டே இரண்டு பஸ்தான்...அதிலும் ஒன்று வராமல் காலை வாரிவிட்டுரும். அப்புறம் நடராஜாதான்....அப்புறம் ரிப்பன், மோதிரம் கூட உண்டு என் சர்க்கிளில். ராகு காலம் எமகண்டம் எல்லாம் பார்ப்பாங்க...அதாவது வீட்டிலிருந்து இறங்குவது...

    கோயிலுக்குப் பெற்றோரோடு...போவது எல்லாம் என் நண்பிகள் வட்டத்தில் உண்டு ஆனால் எங்கள் வீட்டில் கிடையாது.

    கீதா

    ReplyDelete
  10. என் தோழி ஒருத்தி தன் அம்மாவின் முகத்தை 5 முறை பார்த்துட்டு வருவாள். அதாவது போய்ட்டு வரேன்னு சொல்லி வெளிய வந்துட்டு மீண்டும் உள்ளே வந்து என்று ஐந்து முறை பார்த்துட்டு வருவாள்.

    எனக்கு ப்ரேயர் மட்டுமே. சிறிய வயதில் ஒரே ஒரு நம்பிக்கை இருந்தது. கோயிலுக்குச் சென்று பிரார்த்தித்ததும் பிரசாதமாக வெள்ளைப் பூ கையில் கிடைத்தால் நல்லது நடக்கும்...சிவப்பு என்றால் நல்லதில்லை என்று. ஆனால் அப்புறம் தான் தெரிந்தது இப்படியான எண்ணங்கள் நம் மன நிலையை எப்படிப் பாதிக்கிறது என்று. அதுவும் சிவப்புப் பூ வந்தால் மனம் டென்ஷனாகி உள்ளதும் கோட்டை விடும் நிலை..என் தோழி ஒருத்தி தன் ராசி பேனா தொலைந்து விட பரீட்சை எழுதும் நாள் அதை நினைத்தே புலம்பி இருக்கும் நேரத்தில் படித்திருக்கலாம் அதை விட்டு புலம்பி ஃபெயில் ஆனாள். படித்திருந்தால் பாஸாகியிருக்கலாம் என்று என் மனதில் பட்டது....எனவே 10 ஆம் வகுப்பு வருவதற்குள் அதை எல்லாம் விட்டு ஒன்லி ப்ரேயர்...

    என் மகன் பரீட்சை எழுதப் போகும் போது கண்டிப்பா நானும் ப்ரேயர் தான்.

    சகுனம் பார்ப்பதும் நடக்கும் எங்கள் மாமா வீட்டில்..நிறைய சொல்லலாம்...இல்லையா

    கீதா

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி .ஆமாம் ராகு காலம் எமகண்ட நாட்களில் ஏழரைக்கு முன்னாடியே கிளப்பிவிடுவாங்க அது ஒரு லொள்ளு , இன்னும் சுவாரசியமான விஷயங்களை ப் பகிர்ந்தமைக்கு நன்றி கீதா மேட

    ReplyDelete
  12. அம்மா நலமா? எப்படி இருக்கீங்க? பதிவு ஒன்றுமே இல்லையே அதுவும் வீட்டுக்குள் இருக்கும் இந்த கொரோனா காலத்தில்.... நலமாக இருக்க என் வாழ்த்துகலும் பிரார்த்தனைகளும்

    ReplyDelete